Published : 12 Dec 2014 01:37 PM
Last Updated : 12 Dec 2014 01:37 PM

நாடாளுமன்றத்தில் வள்ளுவருக்கு சிலை: பாஜக எம்.பி. கோரிக்கை

நாடாளுமன்ற வளாகத்தில் திருவள்ளுவர் மற்றும் பாரதியாருக்கு சிலை வைக்க வேண்டும் என உத்தரகாண்டைச் சேர்ந்த பாஜக எம்.பி. தருண் விஜய் மாநிலங்களவையில் நேற்று கோரிக்கை விடுத்தார்.

இது குறித்து பூஜ்ஜிய நேரத்தில் பேசிய தருண், “திருவள்ளுவர், ஆண்டாள் போன்றவர்களை பற்றிப் பேசாமல், துளசி தாசரும், மீராவும் மட்டும் இந்தியா ஆகி விடாது. ராஜராஜ சோழன், பாண்டியர் மற்றும் கிருஷ்ணதேவராயர் ஆகியோரை கணக்கில் எடுக்காமல் அசோகர் மற்றும் விக்கிரமாதித்தர் மட்டும் இந்திய வரலாறாகி விடாது. இந்த நாடாளுமன்ற வளாகத்தில் பல்வேறு வீரர்கள், புரட்சியாளர், மற்றும் அறிஞர்களின் சிலைகள் உள்ளன. அவற்றுடன், திருவள்ளுவர் மற்றும் பாரதியாரின் சிலைகளையும் இந்தக் கட்டிடத்தில் அமைக்க வேண்டும்” என்றார்.

பாரதியாரின் பிறந்தநாளை நாடு முழுவதும் கொண்டாட உத்தரவிட்ட அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு நன்றி தெரிவித்தார். பாரதியார் மற்றும் திருவள்ளுவர் பற்றிய பாடங்களையும் அனைத்து பள்ளிகளிலும் சேர்க்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்தார்.இதற்கு உறுப்பினர்கள் மேஜையை தட்டி தருணின் கோரிக்கையை ஆதரித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x