Published : 24 Nov 2014 10:13 AM
Last Updated : 24 Nov 2014 10:13 AM

வி.ராமநாதன் 10

பூமி வெப்பமடைகிறது என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்த விஞ்ஞானி வீரபத்ரன் ராமநாதன் பிறந்தநாள் இன்று (நவம்பர் 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

 மதுரையில் பிறந்தவர். அப்பா விற்பனையாளர் என்பதால் ஊர் ஊராகச் சென்றது குடும்பம். பெங்களூருவுக்குச் சென்று பள்ளியில் சேர்ந்தபோது, ஆங்கிலத்தில் பாடம் நடத்தப்படுவது அவருக்குப் புரியவில்லை. தானாகவே படித்து அறிந்துகொள்ளத் தொடங்கினார்.

 அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு, இந்திய அறிவியல் கழகத்தில் முதுநிலைப் படிப்பு முடித்தார். 1970-ல் முனைவர் பட்ட ஆய்வுக்காக நியூயார்க் மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். வெள்ளி, செவ்வாய் கிரகங்களின் சூழலில் பசுமை இல்ல (க்ரீன் ஹவுஸ்) விளைவு பற்றி ஆய்வு மேற்கொண்டார்.  பூமி வெப்பமடைகிறது. அதன் விளைவுகளை 2000-ம் ஆண்டுமுதல் உணரலாம் என்று 20 ஆண்டுகளுக்கு முன்பே கூறினார். அவரது இந்த கட்டுரை நியூயார்க் டைம்ஸ் முதல் பக்கத்தில் வந்தபோது, ‘நான்சென்ஸ்’ என்றனர் ஹார்வர்டு பிரின்ஸ்டன் விஞ்ஞானிகள்.

 குளிர்சாதனங்களில் பயன்படுத்தப்படும் குளோரோ ஃப்ளூரோ கார்பன்களால்தான் பசுமை இல்ல விளைவு, புவி வெப்பமாதல் ஏற்படுகின்றன. திறன் குறைந்த அடுப்புகளில் உண்டாகும் கரிப்புகையால் ‘பழுப்பு மேகம்’ உருவாகிறது என்று கண்டுபிடித்தார்.

 சுற்றுச்சூழலைப் பாதுகாக்க சூரிய சக்தியைப் பயன்படுத்த வேண்டும். எத்தனால் எரிபொருளைப் பயன்படுத்தினால் கச்சா எண்ணெய் இறக்குமதியே வேண்டாம் என்பது இவரது கருத்து.

 இமாலயப் பனிப்பாறைகள் உருகி ஓட பழுப்பு மேகம் முக்கிய காரணம். சூரிய அடுப்பு, பயோகேஸ் உற்பத்தியால் இதைக் குறைக்க முடியும் என்கிறார்.

 இதற்கான உற்பத்தித் திட்டத்தை அமல்படுத்த நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்கு ‘சூர்யா திட்டம்’ என்று பெயரிட்டுள்ளார்.

 முதல்கட்டமாக உத்தரப் பிரதேச மாநிலம் கைரத்பூர் கிராமத்தில் 300 ஏழைக் குடும்பங்களுக்கு சூரிய சக்தி சமையல் அடுப்பு, விளக்கு வழங்கும் திட்டத்தை 2009-ல் தொடங்கினார்.

 ஏராளமான பரிசுகள், பட்டங்கள், விருதுகளை வென்றுள்ளார். போப் ஆண்டவரின் அறிவியல் கழக உறுப்பினராக 2004-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக வளிமண்டல அறிவியல் மைய இயக்குநராக பொறுப்பு வகிக்கிறார். மதிப்பு, அந்தஸ்து உயர்ந்தாலும் எளிமை விரும்பி. நடந்துசென்று, பேருந்தில் பயணித்துதான் அலுவலகம் செல்கிறார்.

 சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக நடைமுறையில் சாத்தியமான வழிமுறைகளை செயல்படுத்தி வரும் வீரபத்ரன் ராமநாதன், ‘ஃபாரின் பாலிசி’ என்ற அமெரிக்க முன்னணி இதழ் சமீபத்தில் வெளியிட்டுள்ள உலகின் தலைசிறந்த100 சிந்தனையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x