Last Updated : 11 Jul, 2019 07:53 AM

 

Published : 11 Jul 2019 07:53 AM
Last Updated : 11 Jul 2019 07:53 AM

எம்எல்ஏ-க்கள் தங்கியுள்ள விடுதியின் முன் மும்பையில் தர்ணாவில் ஈடுபட்ட டி.கே.சிவக்குமார் கைது

ராஜினாமா செய்த காங்கிரஸ், மஜத அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தங்கியுள்ள மும்பை விடுதி முன்பு தர்ணாவில் ஈடுபட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டார்.

கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக 15-க்கும் மேற்பட்ட காங்கிரஸ், மஜத எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதில் 13 எம்எல்ஏ-க்கள் பாஜகவினரின் பாதுகாப்பில் மும்பையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். இதில் 8 பேரின் ராஜினாமா கடிதங்களை சட்டப்பேரவை தலைவர் ரமேஷ்குமார் நிராகரித்தார்.

காங்கிரஸ், மஜத எம்எல்ஏ-க்களை மீண்டும் கட்சிக்கு அழைத்து வருவதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் நேற்று மும்பை சென்றார். பவாய் பகுதியில் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தங்கியுள்ள ரினைசேன்ஸ் சொகுசு விடுதிக்குள் நுழைய முயன்றார். விடுதி நிர்வாகம் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக, அதிருப்தி எம்எல்ஏ-க்கள் கர்நாடக முதல்வர் குமாரசாமி, டி.கே. சிவக்குமார் ஆகியோரால் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், உரிய பாதுகாப்பு வழங்குமாறு மும்பை மாநகர காவல் ஆணையருக்கு கடிதம் அளித்தனர். இதையடுத்து விடுதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அப்போது காங்கிரஸ் எம்எல்ஏ-க்களை அழைத்துச்செல்ல அனுமதிக்குமாறு டி.கே.சிவக்குமார் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

போலீஸார் அனுமதி மறுத்ததால் கோபமடைந்த டி.கே.சிவக்குமார் விடுதிக்கு முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். அவருடன் மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் சஞ்சய் நிரூபம், மிலிந்த் தியோரா உள்ளிட்டோரும் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த பாஜகவினர், ‘டி.கே.

சிவகுமார் திரும்பி செல்' என முழக்கம் எழுப்பினர். சுமார் 6 மணி நேரம் தர்ணாவில் ஈடுபட்ட சிவக்குமாரை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து விடுதியை சுற்றி 1 கி.மீ. பரப்பளவுக்கு 144 தடை உத்தரவும் பிறப்பித்தனர்.

மும்பையில் கைது செய்யப்பட்ட டி.கே.சிவக்குமார் கலினா பல்கலைக்கழக ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டார். அங்கு டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘எம்எல்ஏ-க்கள் அனைவரும் எங்கள் பக்கம் திரும்பி வருவார்கள் என உறுதியாக நம்புகிறேன். அவர்கள் யாரும் காங்கிரஸ் கட்சியை விட்டு போகவில்லை. பாஜக அவர்களை அடைத்து வைத்துள்ளது. ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால்தான் நான் மும்பைக்கு வந்துள்ளேன்” என்றார்.

இதனிடையே, சிவக்குமாரை மும்பை விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார், அவரை வலுக்கட்டாயமாக பெங்களுரு அனுப்பி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x