Last Updated : 02 Jul, 2019 12:00 AM

 

Published : 02 Jul 2019 12:00 AM
Last Updated : 02 Jul 2019 12:00 AM

ஓராண்டில் 5.86 லட்சம் பேருக்கு வேலை அளிக்கப்பட்டுள்ளது: மத்திய அமைச்சர் தகவல்

2018-19-ம் நிதியாண்டில் 5,86,728 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவார் தெரிவித்தார்.

மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் உறுப்பினர் அடூர் பிரகாஷ் பேசும்போது, “நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. நாட்டில் வேலைவாய்ப்பைப் பெருக்கவும், பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் மத்திய அரசு ஏதாவது நடவடிக்கைகள் எடுத்துள்ளதா” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய அமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவார் எழுத்து மூலம் அளித்த பதில்:நாட்டில் வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. பிரதமரின் வேலைவாய்ப்பு பெருக்கத் திட்டத்தின் கீழ் (பிஎம்இஜிபி) 2018-19-ம் நிதியாண்டில் கடந்த மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி 5,86,728 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருவதாக வந்துள்ள செய்திகள் தவறானவை. ஒரு சில இடங்களில் வேலைவாய்ப்பு குறைவாக இருக்கலாம். ஆனால் நாடு முழுவதும் வேலையில்லாத் திண்டாட்டம் இருப்பதாக கூறுவதில் உண்மை இல்லை.

வேலைவாய்ப்பு தொடர்பான உண்மையான தகவல்களை அவைக்கு அறிக்கையாக தர மத்திய அரசு தயாராக உள்ளது. அதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x