Last Updated : 03 Jul, 2019 03:58 PM

 

Published : 03 Jul 2019 03:58 PM
Last Updated : 03 Jul 2019 03:58 PM

நான் ராஜினாமா செய்துவிட்டேன்; புதிய தலைவரை விரைந்து தேர்வு செய்யுங்கள்: ராகுல் காந்தி திட்டவட்டம்

காங்கிரஸ் கட்சிக்கு விரைந்து புதிய தலைவரைத் தேர்வு செய்யுங்கள் என்று ராகுல் காந்தி திட்டவட்டமாக இன்று தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடந்த 2014-ம் ஆண்டைப் போலவே இந்த முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற முடியவில்லை. கடந்த 2014-ம் ஆண்டில் 44 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சி இந்த முறை 52 இடங்களில் மட்டுமே வென்றது.

மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பொறுப்பேற்று கடந்த மே மாதம் நடந்த காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். ஆனால், செயற்குழுக் கூட்டத்தில் ராகுல் காந்தியின் ராஜினாமா ஏற்கப்படவில்லை.

ஆனால், தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன் என்ற தனது முடிவில்  ராகுல் காந்தி  உறுதியாக இருக்கிறார். ஆனால், எம்.பி.க்கள், மூத்த தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ராகுல் காந்தியை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டும், அவர் தனது முடிவை மாற்றவில்லை.

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் நீடிக்கக் கோரி பல்வேறு மாநிலத் தலைவர்கள், தேசிய அளவில் பொறுப்புகளில் இருக்கும் தலைவர்கள் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் ராஜினாமா செய்துவிட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் சென்று ராகுல் காந்தியைச் சந்தித்து சமாதானம் செய்தனர்.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சிக்குப் புதிய தலைவரைத் தேர்வு செய்ய அடுத்த சில நாட்களில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகின.

மகாராஷ்டிராவைச் சேர்ந்தவருமான சுஷில் குமார் ஷிண்டே அல்லது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே இருவரில் ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ராகுல் காந்தி டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அவரிடம் கட்சியின் எதிர்காலம் குறித்துக் கேட்டபோது, அவர் கூறுகையில், "நான் ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டேன். நான் காங்கிரஸ் தலைவராக இல்லை. காங்கிரஸ் செயற்குழு விரைவாக கூட்டத்தைக் கூட்டி புதிய தலைவராக யாரைத் தேர்வு செய்வது குறித்த முடிவை விரைந்து எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதனால், கடந்த 2 நாட்களுக்கு முன் 5 மாநில முதல்வர்கள் சென்று சமாதானப் பேச்சு நடத்தியும் ராகுல் காந்தி தனது முடிவை மாற்றாமல் இருந்து வருகிறார் எனத் தெரியவந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x