Published : 06 Jul 2019 07:46 PM
Last Updated : 06 Jul 2019 07:46 PM
கிர் காடுகளில் சட்ட விரோத சுரங்க நடவடிக்கைகளை எதிர்த்து வழக்கு தொடர்ந்த தகவலுரிமை சமூக செயல்பாட்டாளர் அமித் ஜேத்வா 2010-ம் ஆண்டு கொல்லப்பட்ட வழக்கில் சிறப்பு சிபிஐ நீதிமன்றம் முன்னாள் பாஜக எம்.பி. தினு சோலங்கி மற்றும் 6 பேரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரங்கள் ஜூலை 11ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
தினு சோலங்கி மற்றும் இவரைச் சேர்ந்தவர்கள் கிர் காட்டுப்பகுதிகளில் சட்ட விரோத சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு சுண்ணாம்பு வெட்டி எடுக்கும் வேலைகளைச் செய்து வந்ததை எதிர்த்து அமித் ஜேத்வா என்ற சமூக ஆர்வலர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து 2010-ம் ஆண்டு உயர் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே ஜேத்வா சிலரால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கிற்கான தீர்ப்பைத்தான் சிறப்பு சிபிஐ நீதிமன்றம் இன்று வழங்கி முன்னாள் பாஜக எம்.பி. தினு சோலங்கி உட்பட இவரது கூட்டாளிகள் 7 பேர் குற்றவாளிகள் என்று அறிவித்தது.
இவர்களுக்கான தண்டனை அளவு வரும் ஜூலை 11ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
உயர் நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ நீதிமன்றத்துக்கு மாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. காரணம் அப்போது சோலங்கி எம்.பி.யாக இருந்ததால் குஜராத் போலீஸ் இவரை குற்றமற்றவர் என்று கிளீன் சிட் அளித்தது.
2013-ல் சோலங்கி டெல்லியில் கைது செய்யப்பட்டார், சிபிஐ இவரை பிரதம சதியாளராக குற்றப்பத்திரிகையில் சேர்த்தது. சோலங்கி மற்றும் இவரது உறவினர் ஷிவா, சுட்டுக் கொலை செய்த ஷைலாஷ் பாண்டியா உட்பட 5 பேர் மீது கொலை உட்பட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
வழக்கு விசாரணையின் போது நிறைய சாட்சிகள் பல்ட்டி அடித்தனர். சுமார் 195 சாட்சிகளில் 105 சாட்சிகள் அந்தர்பல்டி அடித்தனர். உயர் நீதிமன்றம் முதலில் விசாரணைக்கு தடை விதித்தது, பிறகு புதிய விசாரணைக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT