Last Updated : 04 Jul, 2019 10:50 AM

 

Published : 04 Jul 2019 10:50 AM
Last Updated : 04 Jul 2019 10:50 AM

சிலருக்கு மட்டும்தான் துணிச்சல் இருக்கும்; நீங்கள் செய்துவிட்டீர்கள் ராகுல்: பிரியங்கா காந்தி கருத்து

மக்களவைத் தேர்தலில் தோல்விக்குப் பொறுப்பேற்று ராகுல் காந்தி பதவி விலகியதை மதிப்பதாகத் தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, சிலருக்கு மட்டும்தான் துணிச்சல் இருக்கும். நீங்கள் செய்துவிட்டீர்கள் என்று புகழ்ந்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியைச் சந்தித்து 52 இடங்களில் மட்டுமே வென்றது. கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 44 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. இதனால் 2-வது முறையாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸால் பெற முடியவில்லை.

இதனால், தோல்விக்குப் பொறுப்பேற்ற ராகுல் காந்தி, தனது தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து கடந்த மே மாதம் 25-ம் தேதி நடந்த செயற்குழுக் கூட்டத்தில் அறிவித்தார். ஆனால், ராகுல் காந்தியின் முடிவை செயற்குழு ஏற்கவில்லை.

ராகுலின் முடிவை வாபஸ் பெறக்கோரி கடந்த ஒருமாதமாக கட்சியின் பல்வேறு தலைவர்கள், நிர்வாகிகள் அவரைச் சந்தித்துப் பேசினார்கள். ஆனால், ராகுல் காந்தி தனது முடிவில் தீர்க்கமாக இருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு விரைவில் புதிய தலைவரைத் தேர்வு செய்யுங்கள், நான் ராஜினாமா செய்துவிட்டேன் என்று முறைப்படி நேற்று செயற்குழுவுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதினார். அதுமட்டுல்லாமல் விரைவில் செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்றார்.

இந்நிலையில் ராகுல் காந்தியின் முடிவை மதிக்கும் வகையில் அவரின் சகோதரியும், பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில், " தலைவர்  பதவியை ராஜினாமா செய்யும் துணிச்சல் சிலருக்கு மட்டுமே இருக்கும். அதை நீங்கள் செய்துவிட்டீர்கள் ராகுல். உங்களின் முடிவுக்கு நான் மதிப்பளிக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x