Published : 03 Jul 2019 06:44 PM
Last Updated : 03 Jul 2019 06:44 PM

புதியவர் ஒருவர் கட்சியை தலைமையேற்று வழிநடத்துவதே முன்னேற்றத்துக்கு நல்லது: ராகுல் காந்தி எழுதிய கடிதத்தின் முழு பதிவு

காங்கிரஸ் கட்சிக்கு விரைந்து புதிய தலைவரைத் தேர்வு செய்யுங்கள் என்று ராகுல் காந்தி திட்டவட்டமாக இன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிய ழுழு கடிதம் வெளியாகியுள்ளது.

 

அந்த முழு கடிதம் வருமாறு:

 

காங்கிரஸ் கட்சிக்குச் சேவையாற்றுவது எனக்கு கவுரவம், இந்தக் கட்சியின் மதிப்புகள், லட்சியங்கள் இந்த அழகான தேசத்தின் உயிர் ரத்த ஓட்டமாக சேவையாற்றியுள்ளது. இந்த நாட்டுக்கும் இந்த அமைப்புக்கும் நான் அபரிமிதமான அன்புக்கும் நன்றிக்கும் கடமைப்பட்டவனாகிறேன்.

 

2019 தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு இந்தக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொள்கிறேன். பொறுப்பேற்புடைமை கட்சியின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. இந்தக் காரணத்திற்காகத்தான் நான் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தேன்.

 

கட்சியை மறுகட்டுமானம் செய்வதற்கு கடினமான முடிவுகள் தேவை, மேலும் 2019 தேர்தல் தோல்விகளுக்கு கணிசமான சிலரையும் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். மற்றவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறிவிட்டு கட்சியின் தலைவராக என்னுடைய பொறுப்பை நான் புறக்கணித்தால் அது நீதியாகாது.

 

என்னுடைய சகாக்கள் பலர் காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை நான் பரிந்துரை செய்ய வேண்டும் என்று கேட்டனர். நம் கட்சிக்குப் புதிய தலைமை வரவேண்டும் என்பது முக்கியம் என்ற வேளையில் நானே புதிய தலைவரையும் தேர்வு செய்வது சரியாகாது. நம்கட்சிக்கு ஆழமான வரலாறும் பாரம்பரியமும் உள்ளது. போராட்டம், கவுரவம் என்பதை நான் மிகவும் மதிக்கிறேன். இந்திய தேசத்தின் மீது நம் ஆழமான வரலாறும் பாரம்பரியமும் இழைமங்களாக நெய்யப்பட்டுள்ளது. ஆகவே யார் நம்மை தைரியம், அன்பு, நன்றியுடன் நம்மை வழிநடத்துவார்கள் என்பதை கட்சி முடிவு செய்து தலைவரை தேர்ந்தெடுக்கட்டும்.

 

நான் ராஜினாமா செய்த உடனேயே காங்கிரஸ் செயற்குழுவில் உள்ள என் சகாக்களிடம் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் பணியைத் தொடங்க நம்பகமான குழு ஒன்றை அமைப்பதே கட்சியை முன்னோக்கி கொண்டு செல்ல வழிமுறையாகும் என்று குறிப்பிட்டேன். புதிய தலைவரைத் தேர்வு செய்யும் பொறுப்புக்கான அதிகாரத்தை அவர்களுக்கு வழங்கியிருக்கிறேன், ஆகவே தடையற்ற மாற்றத்துக்கும் இந்த நடைமுறைக்கும் என் முழு ஆதரவை அர்ப்பணிக்கிறேன்.

 

என்னுடைய போராட்டம் ஒருபோதும் வெறும் அரசியல் அதிகாரத்துக்கானது அல்ல. எனக்கு பாஜக மீது வெறுப்போ, கோபமோ இல்லை. ஆனால் என் உடலின் ஒவ்வொரு அணுவும் இயல்பூக்கமாகவே பாஜகவின் இந்தியா என்ற கருத்தை எதிர்க்கிறது.  ஏன் இந்த எதிர்ப்பு எழுகிறது என்றால் என்னுடைய இருப்பே இந்தியன் என்ற கருத்தில் வியாபித்திருக்கிறது இது அவர்களுடைய கருத்துடன் நேரடியாகவே மோதல் கொள்கிறது. இது ஒன்றும் புதிய போர் அல்ல. இந்த போர் நம் மண்ணில் ஆயிரமாண்டுகளாக நடத்தப்பட்டு வருவதுதான். எங்கு அவர்கள் வித்தியாசத்தைக் காண்கிறார்களோ நான் அங்கு ஒற்றுமையைக் காண்கிறேன். எங்கு அவர்கள் வெறுப்பைக் காண்கிறார்களோ நான் அன்பைக் காண்கிறேன். அவர்கள் எதைக் கண்டு பயப்படுகிறார்களோ நான் அதை ஆரத்தழுவுகிறேன்.

 

இத்தகைய பரிவு எனதருமை கோடானுகோடி என் சக குடிமக்களையும் வியாபித்திருக்கிறது. இந்தியா என்ற இந்தக் கருத்தைத்தான் நாம் கடுமையாக தற்போது பாதுகாக்கப் பாடுபடவேண்டும்.  நம்முடைய நாடு மற்றும் அதன் கொண்டாடப்படும் அரசியல் சாசனம் மீதான தாக்குதல் நம் தேசத்தின் கட்டமைப்பை சிதைப்பதற்காக உருவாக்கப்படுவதாகும். நான் காங்கிரஸ் கட்சியின் விசுவாசமான வீரன், இந்தியாவின் அர்ப்பணிப்பு மிக்க மகன், ஆகவே இந்தியாவை என் கடைசி மூச்சு உள்ளவரை காக்க வேண்டும் என்பதே லட்சியம்.

 

நாம் தேர்தலை வலுவாகவும் மரியாதைக்குரிய வகையிலும் எதிர்கொண்டோம். நம் பிரச்சாரம் அனைத்தும் சகோதரத்துவம், சகிப்புத்தன்மை, அனைவருக்குமான மரியாதை, அனைத்து மதங்கள், சமூகங்களுக்கான மரியாதை ஆகியவையாகவே இருந்தது.  பிரதமர், ஆர்.எஸ்.எஸ், மற்றும் இவர்கள் பிடித்து வைத்திருக்கும் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு எதிராக உடல் பொருள், ஆவியை அர்ப்பணித்து  நான் தனிமனிதனாகப் போராடினேன். நான் ஏன் போராடினேன் என்றால் நான் இந்தியாவை நேசிப்பவன்.  எந்த லட்சியங்கள் மீது இந்தியா என்ற தேசம் கட்டமைக்கப்பட்டுள்ளதோ அதைக் காக்க நான் போராடினேன். சில நேரங்களில் நான் தனித்து விடப்பட்டேன் ஆனால் இதற்காக நான் பெருமைப்படுகிறேன். நம் தொண்டர்களின், கட்சி உறுப்பினர்களின், ஆண்களின், பெண்களின் உணர்ச்சிமிகு பணிகள் மற்றும் அர்ப்பணிப்புகளிலிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். இவர்கள்தான் எனக்கு அன்பையும் நாகரிகத்தையும் கற்றுக் கொடுத்தனர்.

 

சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடைபெறுவதற்கு நாட்டின் நடுநிலையான அமைப்புகள் தேவை. நடுநிலையாளர்கள்,  ஊடக சுதந்திரம், சுதந்திரமான நீதித்துறை, தேர்தல் ஆணையத்தின் வெளிப்படைத்தன்மை ஆகியவை இல்லாமல் ஒரு தேர்தல் நியாயமானதாக இருக்க முடியாது.  அதே போல் ஒரு கட்சி மட்டும் நிதியாதாரங்களில் ஏகபோக உரிமையுடன் செயல்படுவதும் நியாயமான தேர்தலாக இருக்க முடியாது.

 

2019 தேர்தலில் நாம் ஒரு அரசியல் கட்சியை எதிர்கொள்ளவில்லை மாறாக இந்திய அரசின் எந்திரம் முழுமையையும் எதிர்கொண்டோம். இந்திய அரசின் அனைத்து நிறுவனங்களும் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக அணிவகுக்கப்பட்டன. நம் நாட்டில் முன்பு கொண்டாடப்பட்ட அமைப்புகளின் நடுநிலைத் தன்மை என்பது இப்போது இல்லை என்பது நமக்கு தெள்ளத் தெளிவாகப் புரிகிறது. 

 

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கூறப்பட்ட குறிக்கோள்கள், அதாவது நாட்டின் மதிப்பு மிக்க அமைப்புகளை கைவசப்படுத்துவது என்பது தற்போது பூர்த்தியடைந்து விட்டது. நம் ஜனநாயகம் அடிப்படை அமைப்பிலேயே பலவீனப்படுத்தப்பட்டு விட்டது. இப்போதிலிருந்துதான் அபாயம் ஆரம்பிக்கிறது, இந்தியாவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்தல் என்பது இனி வெறும் சடங்குதான்.

 

இத்தகைய அதிகாரப் பீடிப்பு இந்தியாவுக்கு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு வன்முறையையும் வலியையும் ஏற்படுத்துவதாக முடியும். விவசாயிகள், வேலையற்ற இளையோர் சமுதாயம், பெண்கள், பழங்குடியினர், தலித்துகள், சிறுபான்மையினர் ஆகியோர்தான் அதிக துன்பத்தை சந்திக்க நேரிடும். நம் தேசத்தின் பொருளாதாரம் மற்றும் மரியாதை மீதான தாக்கம் பேரழிவு ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். பிரதமரின் வெற்றி என்பது அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளின் பரப்பை மறுத்து விடாது; எந்த பெரிய பணமும், கடும் பிரச்சாரமும் உண்மையின் வெளிச்சத்தை மறைக்க முடியாது.  நம் மதிப்பு மிக்க ஜனநாயக அமைப்புகளை மீண்டும் பெற அவை புத்துயிர் பெற தேசம் ஒன்று படுவது அவசியம்.  இந்த உயிர்ப்பின் சாதனம் காங்கிரஸ் கட்சிதான்.

 

இதைச் சாதிக்க வேண்டுமெனில் காங்கிரஸ் கட்சி வேரடியாக தன்னைத் தானே மாற்றியமைத்துக் கொள்வது அவசியம். இன்றைய தினம் பாஜக இந்திய மக்களின் குரல்களை மிகவும் அமைப்புரீதியாக ஒடுக்கி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் கடமையே இத்தகைய குரல்களை காப்பதாகும். இந்தியா ஒரு போதும், எப்போது ஒற்றைக்குரலாக இருக்காது. இந்திய நாடு என்பது எப்போதும் ஏற்கெனவே குரல்களின் சங்கமம்தான் ஒத்திசைவுதான். இதுதான் பாரதமாதாவின் உண்மையான சாராம்சம்.

 

என்னை ஆதரித்த வெளிநாட்டு வாழ், உள்நாட்டு இந்திய உள்ளங்களுக்கு என் நன்றிகளைப் பதிவு செய்கிறேன். காங்கிரஸ் கட்சியின் லட்சியங்களுக்காக நான் நிச்சயம் கடைசி வரை போராடுவேன். என் சேவை எப்போது தேவைப்பட்டாலும் நான் கட்சிக்கு சேவையாற்ற காத்திருக்கிறேன்... இந்தியாவில் சக்திவாய்ந்தவர்கள் அதிகாரத்திற்கு வருவார்கள். யாரும் அதிகாரத்தை தியாகம் செய்ய மாட்டார்கள். நாமும் நம் அதிகாரத்துக்கான இச்சையை தியாகம் செய்யாமல், ஆழமான கொள்கை போராட்டம் இல்லாமல்  எதிர்க்கட்சியை தோற்கடிக்கப்போவதில்லை. நான் காங்கிரஸ்காரனாகப் பிறந்தேன், இந்த கட்சி என்னுடனேயே இருந்துள்ளது, இதுதான் என் உயிர் மூச்சு எப்போதும் இப்படித்தான் இருக்கப் போகிறது.

 

இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார் ராகுல் காந்தி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x