Published : 29 Jun 2019 10:15 AM
Last Updated : 29 Jun 2019 10:15 AM
கேரளாவில் மக்களவைத் தேர்தலில் இடதுசாரி கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்த நிலையில் தற்போது நடைபெற்றுள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் பெரும் வெற்றி பெற்று தனது செல்வாக்கை தக்க வைத்துக் கொண்டது.
அனைத்து வயதுப்பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கேரள மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகள், பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு இந்த விவகாரம் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. 20 இடங்களில் ஓரிடத்தில் மட்டுமே இடதுசாரி கூட்டணி வென்றது. 19 தொகுதிகளை காங்கிரஸ் அணி கைபற்றியது. ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பாஜக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது.
இந்தநிலையில், கேரளா மாநிலத்தில் காலியாக உள்ள 44 உள்ளாட்சி இடங்களுக்கு ஜூன் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சி கூட்டணியும், காங்கிரஸ் மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகளும் போட்டியிட்டன
இந்த இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. அதில், ஆளும் இடதுசாரி முன்னணி 22 இடங்களில் வெற்றி பெற்றது. காங். தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 17 இடங்களில் மட்டுமே வென்றது. பாஜக கூட்டணி 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மக்களவைத் தேர்தலில் இழந்த செல்வாக்கை உள்ளாட்சி இடைத் தேர்தலில் இடது முன்னணி தக்க வைத்துக் கொண்டது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT