Last Updated : 22 Aug, 2017 11:47 AM

 

Published : 22 Aug 2017 11:47 AM
Last Updated : 22 Aug 2017 11:47 AM

சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க சசிகலா கோரிக்கை

ஜெயலலிதா இறந்தபின்னர் வழக்கின் தன்மை மாறியுள்ளதால், சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சசிகலா தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக்கோரும் சீராய்வு மனு மீதான விசாரணையில் சசிகலா தரப்பு இந்த வாதத்தை எழுப்பியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.10 கோடி அபராதம் விதித்து பெங்களூரு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக்கோரும் சீராய்வு மனுவை மூவரும் கடந்த ஏப்ரல் மாதம் தாக்கல் செய்தனர்.

அதில், “அரசு ஊழியரான ஜெயலலிதா மீதான வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. இதன்மூலம் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம், அரசு ஊழியர் அல்லாத எங்களை ஊழல் தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தண்டிக்க முடியாது. எனவே, எங்களையும் விடுவிக்க வேண்டும்” என முறையிட்டனர்.

சசிகலா தரப்பு கடந்த மே 3-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் சீராய்வு மனுவை தாக்கல் செய்தது. இதை பரிசீலனைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம் மே 10-ம் தேதி வழக்கு எண் ஒதுக்கியது. சீராய்வு மனு விசாரணைக்கு வருவதற்கு முன்பாகவே, மூல வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி பினாகி சந்திரகோஷ் கடந்த மே மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், நீதிபதிகள் அமிதவ ராய், ரோஹின்டன் நரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வழக்கை விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

“நீதிபதி ரோஹின்டன் நரிமனின் தந்தையும், வழக்கறிஞருமான ஃபாலி நரிமன் இவ்வழக்கில் குற்றவாளிகள் தரப்பில் ஆஜராகி வாதிட்டுள்ளார். தந்தை வாதிட்ட வழக்கில் மகன் தீர்ப்பளிக்கக் கூடாது” என மூத்த வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இவ்வழக்கில் இருந்து நீதிபதி ரோஹின்டன் நரிமன் விலகியதால், விசாரணை தள்ளிப்போனது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றம், சசிகலா தரப்பின் சீராய்வு மனு நீதிபதி நவின் சின்ஹா தலைமையிலான அமர்வு முன்னிலையில் ஆகஸ்ட் 11-ம் தேதி விசாரிக்கப்படும் என அறிவித்தது. ஆனால் அன்றும் சீராய்வு மனு விசாரிக்கப்படவில்லை.

பொதுவாக குற்றவியல் வழக்குகளில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு 30 நாட்களுக்குள் உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொள்ளும். ஆனால் இம்மனு தாக்கல் செய்யப்பட்டு, 90 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை விசாரிக்கப்படவில்லை.

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 22-ம் தேதி) மதியம் 01.40 மணிக்கு நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே மற்றும் அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரிக்கும் என்று நீதிமன்ற பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் சசிகலா தரப்பின் மீதான சீராய்வு மனுவை இன்று விசாரிக்க அதிக வாய்ப்புள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x