Published : 29 Aug 2017 09:53 AM
Last Updated : 29 Aug 2017 09:53 AM

ஆந்திராவில் நடிகை ரோஜாவுக்கு எதிராக சந்திரபாபு கட்சியில் சேருகிறார் வாணி விஸ்வநாத்

ஆந்திர அரசியலில் நடிகை ரோஜாவிற்கு போட்டியாக களம் இறங்க உள்ளார் நடிகை வாணி விஸ்வநாத். இவர் விரைவில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைய உள்ளார்.

நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநில மகளிர் அணி தலைவருமான நடிகை ரோஜா, ஆந்திர அரசியலில் மிகவும் பிரபலமானவர். பொதுக் கூட்டங்களில் தெலுங்கு தேசம் கட்சியையும் முதல்வர் சந்திரபாபு நாயுடுவையும் மிகக் கடுமையாக தாக்கி பேசி வருகிறார். நடிகை என்பதால் ரோஜாவுக்கு கூட்டமும் கூடுகிறது. இதை சமாளிக்க ரோஜாவுக்கு பதிலடி கொடுக்க தெலுங்கு தேசம் கட்சி திட்டமிட்டுள்ளது.

ரோஜாவுக்கு போட்டியாக மற்றொரு நடிகையை தெலுங்கு தேசம் கட்சியினர் களமிறக்க தயாராகி விட்டனர். சமீபத்தில் நகரி தொகுதியை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியினர் சென்னைக்கு சென்று, நடிகை வாணி விஸ்வநாத்தை சந்தித்தனர்.இவர், தமிழில் மண்ணுக்குள் வைரம், மை இந்தியா, சங்கு புஷ்பங்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், தெலுங்கு, மலையாளம், கன்னட திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானவர்.

சென்னை சென்ற தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் தங்கள் கட்சியில் சேர வேண்டும் என்று வாணி விஸ்வநாத்தைக் கேட்டுக் கொண்டனர். இதற்கு, வாணி விஸ்வநாத்தும் சம்மதித்து விட்டதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர். விரைவில் ஆந்திரா தலைநகர் அமராவதி சென்று, சந்திரபாபு நாயுடு முன்னிலையில் தெலுங்கு தேசம் கட்சியில் வாணி விஸ்வநாத் சேர உள்ளார். இதனை தொடர்ந்து இவர் தெலுங்கு தேசம் கட்சிக்காக பிரச்சாரங்களில் ஈடுபட உள்ளார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x