Published : 26 Aug 2017 05:43 PM
Last Updated : 26 Aug 2017 05:43 PM
பிஹாரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் ரூ.500 கோடியை உடனடியாக வழங்க ஆணை பிறப்பித்தார்.
வெள்ள சேதத்தை பார்வையிட பிரதமர் மோடி இன்று காலை தனி விமானம் மூலம் பிஹார் மாநிலத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு ஹெலிகாப்டரிலிருந்து வெள்ளப் பகுதிகளை பார்வையிட்டார்.
மாநில முதல்வர் நிதிஷ்குமாரும் அவருடன் வெள்ளப் பகுதிகளுக்குச் சென்றார். வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் பார்வையிட்ட பிறகு உடனடியாக வெள்ள சேதத்தை மதிப்பிடுமாறு மத்தியக் குழுவினருக்கு அவர் உத்தரவிட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவிக்கிறது.
வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 2 லட்சம் வழங்குவதற்கு இத்தொகை உடனடியாக விடுவிக்கப்படுகிறது. பயிர் சேதம் குறித்த விவரங்களை சேகரித்து விவசாயிகளுக்கு தாமதமின்றி நிவாரணம் வழங்கும்படியும் காப்பீட்டு நிறுவனங்களை பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வெள்ள சேதத்தைப் பார்வையிட்ட பிறகு பிரதமர், மாநில முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் சுஷில் குமார் மோடி மற்றும் மாநில உயரதிகாரிகளுடன் பூர்ணியாவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இம்முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT