Published : 24 Aug 2017 09:02 AM
Last Updated : 24 Aug 2017 09:02 AM
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு பெறுவதற்கான ஆண்டு வரு மான உச்ச வரம்பு ரூ.6 லட்சத்திலிருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு மத்திய நிதியமைச்சர் ஜேட்லி கூறியதாவது:
ஓபிசி பிரிவினர் மத்திய அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு பெறுவதற்கான ஆண்டு வருமான உச்ச வரம்பை ரூ.6 லட்சத்திலிருந்து ரூ.8 லட்சமாக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. பொதுத் துறை நிறுவன வேலை வாய்ப்புகளிலும் இந்த முடிவை அமல்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
மேலும் ஓபிசி பிரிவின் கீழ் வரும் பல சாதிகளை துணைப் பிரிவுகளாக வகைப்படுத்துவது குறித்து ஆராய, அரசியலமைப்பு சட்டத்தின் 340-வது பிரிவின் கீழ் ஆணையம் அமைக்கவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்த ஆணையத்தின் தலைவர் நியமிக்கப்பட்ட நாளிலிருந்து 12 வாரங்களில் தனது அறிக்கையை தாக்கல் செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “இந்திய-நேபாள எல்லையில் மெச்சி ஆற்றின் குறுக்கே ரூ.159 கோடியில் பாலம் அமைக்க நேபாள அரசுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். இதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழகம் செயல்படுத்தும். இதன்மூலம் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவு அதிகரிக்கும்” என கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT