Published : 18 Aug 2017 08:42 PM
Last Updated : 18 Aug 2017 08:42 PM
அதானி குழுமம் மின்சாதனங்களை இறக்குமதி செய்து அதன் விலைகளைக் அதிகரித்துக் காட்டியதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி, இது குறித்து உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.
இறக்குமதி விலையை கூட்டிக் காண்பித்ததால் நாடு முழுதும் மக்கள் யூனிட் ஒன்றிற்கு ரூ.2 கூடுதலாக அளிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது
காங்கிரஸ் மூத்த செய்தித் தொடர்பாளர் அஜய் மாக்கன், உடனடியாக அதானி குழுமம் மின்சேவை வழங்கும் பகுதிகளில் மின்கட்டணத்தை யூனிட்டுக்கு ரூ.2 குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆனால் அதானி குழுமம் இந்தக் குற்றச்சாட்டை மறுத்து, “இந்தக் குற்றச்சாட்டுகள் தூண்டிவிடப்பட்டவை, பரபரப்பு உருவாக்குவதற்காக இத்தகைய அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என்று மறுத்துள்ளது.
பிப்ரவரி 5, 2013 அன்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அதானி குழுமத்தின் கிளை நிறுவனம் இறக்குமதிச் செய்யப்பட்ட மின்சாதனங்களை விலை கூடுதலாகக் காட்டியது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டதாக மாக்கன் தெரிவித்தார்.
இதனையடுத்து வருவாய் உளவுத்துறை இயக்குனரகம் நடத்திய விசாரணை முடிவுகளின்படி அதானி கிளை நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு 97 பக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்றார் மாக்கன்.
“இதனால் மின்கட்டணம் நாட்டின் சில பகுதிகளில் கூடுதலாகியுள்ளது, பாஜக அரசு உடனடியாக உச்ச நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பாஜக அரசு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த பிறகே இது குறித்த விசாரணை மந்தமானதாக மாக்கன் குற்றஞ்சாட்டினார்.
மேலும் வரித்தவிர்ப்பு, போலி நிறுவனங்களை ஏற்படுத்துவது குறித்து நரேந்திர மோடியே பேசியுள்ளார். உரக்க இதற்கு எதிராக உறுதி மொழிகளை அளித்தார் மோடி. தங்களுடைய வார்த்தைகள் வெறும் ஜோடனை அல்ல என்பதை மோடி அரசு நிரூபிக்க இதுவே தருணம்.
அதானியோ அல்லது இன்னும் பெரிய முறைகேட்டு ஆசாமிகளோ விட்டுவைக்கப் படுகின்றனர், காரணம் அவர்கள் மோடிக்கு நெருக்கமானவர்கள் என்பதாலா?” என்று சாடினார் அஜய் மாக்கன்.
அதானி குழும செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “பொறுப்பான கார்ப்பரேட் குடிமகனாக எங்கள் வர்த்தக நடவடிக்கைகள் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டே செய்யப்படுகின்றன” என்றார்.
இது குறித்து கட்டுரை ஒன்றை அயல்நாட்டு ஊடகம் ஒன்றிற்கு மேற்கோள் காட்டிய மாக்கன், “இந்த விவகாரத்தில் மின்கட்டணங்கள் 3 விதங்களில் அதிகமாக்கப்படுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரிக்கு அதிக விலை கொடுத்ததாகக் காட்டுவது, மின்நிலைய சாதனங்களுக்கும் இறக்குமதி விலையைக் கூட்டிக்காட்டுவது.
எனவே மத்திய மின்சாரக் கட்டுப்பாட்டு ஆணையம் தனியார் மின் நிறுவனங்களின் அனைத்து இன்வாய்ஸ்களையும் சோதனையிட வேண்டும். போலி அதிவிலை நிர்ணயிக்கப்பட்டிருந்தால் மின்கட்டணங்களைக் குறைக்க வேண்டும்
இது குறித்து சமீபத்தில் வெளியான அயல்நாட்டு ஊடக செய்திகளின் படி, “அதானி குழுமம் தங்களுடைய அயல்நாட்டு நிறுவனங்களைப் பயன்படுத்தி மின் சாதனங்களை வாங்கி, பிறகு அதனை தன் இந்திய கிளை நிறுவனத்துக்கு விலையை கண்டபடி அதிகரித்து விற்கிறது. அதாவது அசல் விலையைக் காட்டிலும் 860% கூட்டிக் காட்டப்படுகிறது”.
இவ்வாறு கூறினார் அஜய் மாக்கன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT