Last Updated : 22 Aug, 2017 09:44 AM

 

Published : 22 Aug 2017 09:44 AM
Last Updated : 22 Aug 2017 09:44 AM

சீனா, பாகிஸ்தான், கார்கில் போரில் பங்கேற்ற:காஷ்மீர் லடாக் ஸ்கவுட் ராணுவ பிரிவுக்கு விருது:குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவித்தார்

நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் கடந்த மாதம் 25-ம் தேதி பதவியேற்றார். அதன்பின் முதல் முறையாக காஷ்மீரின் உயரமான லே பகுதிக்கு சென்றார். அங்குள்ள லடாக் ஸ்கவுட் ராணுவப் பிரிவை கவுரவிக்கும் வகையில் குடியரசுத் தலைவரின் வண்ணமிகு கொடியை (மரியாதை செலுத்தும் அடையாள சின்னம்) அவர்களுக்கு வழங்கினார்.

பின்னர் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:

குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற பிறகு முதன்முதலாக காஷ்மீரின் அழகான லே பகுதிக்கு பயணம் மேற்கொள்ள விரும்பினேன். முப்படைகளின் தலைவர் என்ற முறையில் எனது இந்த பயணத்தை ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.

கடந்த 1947-48 போரின் போதும், சீனாவுடன் 1962-ல் நடந்த போரிலும், கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரிலும், 1999-ம் ஆண்டு கார்கில் போரிலும் லடாக் ஸ்கவுட் ராணுவப் பிரிவு வீரர்கள் துணிச்சலுடன் செயல்பட்டு நாட்டின் எல்லைகளைப் பாதுகாத்தனர். அவர்களுடைய வீரத்தைப் பாராட்டுகிறேன். மிக கடுமையான குளிர் நிறைந்த இந்தப் பகுதியில் நாட்டைக் காக்கும் உங்கள் மன உறுதி மிகப் பெரியது.

இவ்வாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், காஷ்மீர் ஆளுநர், ராணுவ உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

லடாக் பகுதியில் எல்லையைக் கடந்து இந்தியப் பகுதிக்குள் சீன ராணுவத்தினர் நேற்று முன்தினம் ஊடுருவ முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து விரட்டினர். இந்தச் சம்பவம் நடந்த நிலையில் குடியரசுத் தலைவர் லடாக் பயணம் மேற்கொண்டுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x