Published : 15 Aug 2017 11:26 AM
Last Updated : 15 Aug 2017 11:26 AM
தீவிரவாத நிதியுதவி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹுரியத் தலைவர் சையது அலி ஷா கிலானியின் மருமகன் உட்பட 4 பிரிவினைவாதிகளை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு நிதியுதவி வழங்குவதாகவும் அந்த நிதி போராட்டக்காரர்களுக்கு வழங்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதுதவிர பிரிவினைவாதிகள் இளைஞர்களை வன்முறைக்கு தூண்டுவதாகவும் தகவல் வெளியானது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ), பிரிவினைவாத அமைப்புகளின் முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர். இதில் சில முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், கிலானியின் மருமகன் அல்டாப் அகமது ஷா உட்பட 7 பேரை கடந்த மாதம் 24-ம் தேதி என்ஐஏ கைது செய்தது.
பின்னர் டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்ற அனுமதி பெற்று அல்டாப் உள்ளிட்ட 4 பேரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை முடிந்த நிலையில், நால்வரையும் நீதிபதி பங்கஜ் சர்மா முன்பு நேற்று ஆஜர்படுத்தினர்.
இதையடுத்து, 4 பேரையும் 14 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். மீதமுள்ள 3 பேர் ஏற்கெனவே நீதிமன்றக் காவலில் (செப்டம்பர் 1 வரை) வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT