Published : 30 Jul 2017 10:46 AM
Last Updated : 30 Jul 2017 10:46 AM

பாரத் மாதா கீ ஜே கோஷம் விவகாரம்: ராம்தேவுக்கு பிறப்பித்த வாரன்ட்டுக்குத் தடை- ஹரியானா மாநில நீதிமன்றம் உத்தரவு

பாரத் மாதா கீ ஜே கோஷம் தொடர்பான சர்ச்சை பேச்சால் யோகா குரு பாபா ராம்தேவுக்குப் பிறப்பிக்கப்பட்ட ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்ட்டுக்குத் தடை விதித்துரோத்தக் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹரியானா மாநிலம் ரோத்தக்கில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் யோகா குரு பாபா ராம்தேவ் பேசுகையில், ‘பாரத் மாதா கீ ஜே’ என்ற கோஷத்தை முழங்காதவர்களின் தலையை துண்டிக்க வேண்டும்’ என கூறியிருந்தார். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. மேலும், ராம்தேவ் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரியானா மாநில முன்னாள் உள்துறை அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சுபாஷ் பத்ரா போலீஸில் புகார் அளித்தார்.

ஆனால் அவர் மீது போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து ரோத்தக் நீதிமன்றத்தில் பாபா ராம்தேவுக்கு எதிராக சுபாஷ் பத்ரா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நேரில் ஆஜராக ராம்தேவுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பிய போதும், கடந்த மே 12-ம் தேதி விசாரணைக்கு பாபா ராம்தேவ் ஆஜராகவில்லை.

இந்நிலையில் அந்த வழக்கு மீது கடந்த 14-ம் தேதி விசாரணை நடத்திய நீதிமன்றம் பாபா ராம்தேவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. மேலும் வழக்கை வரும் ஆகஸ்ட் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதற்கிடையே ராம்தேவ் தரப்பில் அவரது வழக்கறிஞர் சத்யபால் ஜெயின் சார்பில் கடந்த வியாழக்கிழமை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு ஒத்திவைப்பு

இதில் யோகா குரு பாபா ராம்தேவ் கூறிய கருத்து முஸ்லிம்களுக்கு எதிரானதாக சித்தரிக்கப்பட்டதாகவும், கீழ் நீதிமன்றம் அவசர கதியில் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுவை விசாரித்த கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி நரிந்தர் கவுர், கீழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதித்தார். மேலும் வழக்கு விசாரணையை செப்டம்பர் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x