Published : 28 Jul 2017 06:30 PM
Last Updated : 28 Jul 2017 06:30 PM

குஜராத்தில் மேலும் 3 காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் பாஜகவில் இணைந்தனர்: விலகியவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்வு

குஜராத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் 3 எம்எல்ஏக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்தனர்.

மன்சிங் சவுஹான், ராம்சிங் பர்மார், சனபாய் சவுத்ரி ஆகிய மூன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இன்று தங்கள் பதவியில் இருந்து விலகியுள்ளனர். முன்னதாக நேற்று 3 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்திருந்தனர்.

குஜராத் மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சங்கர் சிங் வகேலா அண்மையில் அந்தக் கட்சியில் இருந்து விலகினார். தற்போது அவரது ஆதரவாளர்கள் பல்வந்த் சிங் ராஜ்புத், தேஜஸ்ஸ்ரீ படேல், பிரலாத் படேல் ஆகிய 3 எம்எல்ஏக்கள் நேற்று தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தனர். இதில் பல்வந்த் சிங் ராஜ்புத் காங்கிரஸின் தலைமைக் கொறடா ஆவார்.

குஜராத்தில் வரும் 8-ம் தேதி 3 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் நடை பெற உள்ளது. இதில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் போட்டியிடுகின்றனர். அவர்கள் வெற்றி பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது எம்.பி. பதவிக்கு காங்கிரஸில் இருந்து விலகிய பல்வந்த் சிங் ராஜ்புத், காங்கிரஸின் அகமது படேலுக்கு எதிராகப் போட்டியிடுவார் என்று பாஜக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தரப்பில் அந்த கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் போட்டியிடுகிறார். அவர் வெற்றி பெற 47 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.

சட்டப்பேரவையில் காங்கிரஸுக்கு 57 எம்எல்ஏக்கள் இருந்தனர். இதில் இதுவரை 6 பேர் பதவி விலகி உள்ளனர்.

மேலும் 10 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு மாறக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அகமது படேலின் வெற்றி கேள்விக்குறியாகி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x