Published : 27 Jul 2017 01:02 PM
Last Updated : 27 Jul 2017 01:02 PM
பிஹார் மெகா கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுடன் கைகோர்ப்பது என்ற முடிவை நிதிஷ் குமார் மூன்று மாதங்களுக்கு முன்னரே எடுத்துவிட்டார். அரசியலில் தனது சுய லாபத்துக்காகவே நிதிஷ் குமார் பாஜகவுடன் இணைந்துள்ளார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
ராகுல் கூறியதாவது:
மெகா கூட்டணியில் இருந்து விலகும் முடிவை நிதிஷ் குமார் 3 அல்லது 4 மாதங்களுக்கு முன்னரே எடுத்துவிட்டார் என்பதை நான் அறிவேன். மதவாதத்துக்கு எதிராக போராடப்போவதாக நிதிஷ் எங்களுடன் இணைந்தார். ஆனால், தனது அரசியல் சுயலாபத்துக்காக யாரை எதிர்த்தாரோ அவர்களோடு இப்போது இணைந்துள்ளார். இதுதான் இந்திய அரசியலின் பிரச்சினை.
அரசியலில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ண ஓட்டம் இதுதான் என்பதை யூகிக்க முடியும். அந்தவகையில் நிதிஷ் குமார் மனதில் கடந்த 3, 4 மாதங்களாக எந்த மாதிரியான எண்ண அலைகள் இருந்தது என்பது எனக்குத் தெரியும். சுயநலத்துக்காக சிலர் என்னவேண்டுமானாலும் செய்வார்கள். கொள்கையும், நம்பகத்தன்மையும் இல்லை. அதிகாரத்துக்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக இன்று (வியாழக்கிழமை) காலை பாஜக ஆதரவோடு நிதிஷ் குமார் பிஹார் முதல்வராக பதவியேற்றார். பாஜகவின் சுஷில் குமார் மோடி துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT