Published : 13 Jul 2017 12:59 PM
Last Updated : 13 Jul 2017 12:59 PM
அமர்நாத் யாத்ரீகர்கள் பயணம் செய்த பேருந்து மீது இருசக்கர வாகனத்தில் வந்த தீவிரவாதிகள் 75 மீட்டர் தூரத்திலிருந்து தாக்குதல் நடத்தியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
திங்கள்கிழமை இரவு அமர்நாத் யாத்ரீகர்கள் பயணம் செய்த பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 7 பேர் பலியாயினர். 19 பேர் காயமடைந்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இந்தத் தாக்குதலை தீவிரவாதிகள் எவ்வாறு நடத்தினர் என்று போலீஸ் தரப்பில் விளக்கப்பட்டுள்ளது.
போலீஸார் தரப்பில் கூறியிருப்பதாவது, "எங்களுக்கு கிடைத்த முதல் கட்ட தகவலின் அடிப்படையில், குஜராத்தில் பதிவு செய்யப்பட்ட பேருந்து அமர்நாத் கோயிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த தீவிரவாதிகள் 75 மீட்டர் தூரத்தில் இருந்து யாத்ரீகர்கள் பேருந்து மீது துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்ட சத்தத்தை கேட்டு, மத்திய பாதுகாப்புப் படையினர் மற்றும் காஷ்மீர் போலீஸார் அப்பகுதிக்கு விரைந்தனர். இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சூடு சண்டை நடந்துள்ளது. தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்" என்று கூறப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலை லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் நடத்தியுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் படைத்தளபதி அபு இஸ்மாயில் இந்தத் தாக்குதலுக்கு சதி திட்மிட்டதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT