Last Updated : 11 Jul, 2017 03:28 PM

 

Published : 11 Jul 2017 03:28 PM
Last Updated : 11 Jul 2017 03:28 PM

இறைச்சிக்காக மாடு விற்க உச்ச நீதிமன்றம் அனுமதி: மத்திய அரசின் உத்தரவுக்கு தடை நீட்டிப்பு- புதிய உத்தரவு வெளியிடப் போவதாக தகவல்

இறைச்சிக்காக மாடுகளை விற்க அனுமதியில்லை என்று மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை மாற்றி அமைக்கப் போவதாக உச்ச நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை மத்திய அரசின் உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு நாடு முழுவதும் அமலாகும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

மிருக வதை தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்து கடந்த மே மாதம் மத்திய அரசு ஓர் அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில், அகில இந்திய ஜாமியதுல் குரேஷ் ஆக் ஷன் கமிட்டி தலைவர் முகமது அப்துல் பஹீம் குரேஷி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில் கூறியிருப்பதாவது:

இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவு நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் வாழ்வா தாரத்தை பாதிக்கும். ஒரு லட்சம் கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும் மாட்டிறைச்சி வர்த்தகத் துக்கும் பாதிப்பை ஏற்படுத் தும். மேலும், இந்த உத்தரவு தனிமனித உணவு உரிமை, மத வழக்கங்களை மேற் கொள்ளும் அடிப்படை உரிமை, தனி மனித சுதந்திரம் ஆகியவற்றை பாதிக்கும் செயலாகும். மிருக வதை தடுப்புச் சட்டம் 1960-ன் கீழ் இந்த உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

மிருக வதை ஆகாது

மிருக வதை தடுப்புச் சட்டம் பிரிவு 11-ன் படி உணவுக்காக விலங்குகளை கொல்வது மிருக வதை ஆகாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாரபட்சமாக, சட்ட விரோதமாக பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டி ருந்தது.

மத்திய அரசின் புதிய உத்தரவுக்கு எதிராக, இதேபோன்று வேறு சில மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், சல்மான் குர்ஷித், சந்தர் உதய்சிங் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

புதிய உத்தரவில் மாற்றம்

மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நரசிம்மா, ‘இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு சார்பில் விதிக்கப் பட்ட தடைக்கு எதிராக பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் மற்றும் போராட்டங்கள் நடந்துள்ளன. இவற்றை கருத்தில் கொண்டு புதிய உத்தரவில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பல்வேறு தரப்பினரின் கருத்துகள், நீதிமன்றங்களில் தொடரப் பட்டுள்ள வழக்குகளில் குறிப்பிடப் பட்டுள்ள கோரிக்கைகள் ஆகியவை பரிசீலிக்கப்பட்டு புதிய உத்தரவு பிறப்பிக்கப்படும். எனவே, தடையை நீக்க வேண்டும் என்று மத்திய அரசு கோரவில்லை’ என்றார்.

இதையடுத்து, மத்திய அரசின் புதிய உத்தரவுக்கு விதிக்கப்பட் டுள்ள தடை நீட்டிக்கப் படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு தற்போது நாடு முழுமைக் கும் பொருந்தும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மத்திய அரசு தனது உத்த ரவை மாற்றியமைத்த பின்பு இந்த வழக்கு மீண்டும் விசா ரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x