Last Updated : 25 Jul, 2017 09:31 AM

 

Published : 25 Jul 2017 09:31 AM
Last Updated : 25 Jul 2017 09:31 AM

‘காஷ்மீர் பண்டிட்’ கொலை வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

காஷ்மீர் பண்டிட்கள் கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. சம்பவம் நடந்து 27 ஆண்டுகளுக்குப் பிறகு எந்த ஆதாரமும் கிடைக்காது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

‘ரூட்ஸ் இன் காஷ்மீர்’ என்ற அமைப்பின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘கடந்த 89-90-ம் ஆண்டுகளில் காஷ்மீரில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த இந்து பண்டிட் இனத்தவர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் அவர்கள் வீடுகளை இழந்து வெளியேறினர். சுமார் 700-க்கும் மேற்பட்ட பண்டிட்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவங்கள் தொடர்பாக பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த யாசின் மாலிக், பிட்டா கராத்தே உள்ளிட்டோர் மீது 215-க்கும் மேற்பட்ட முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. ஆனால், இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இம்மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பவம் நடந்து 27 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஸ் படோரா, ‘அப்போது காஷ்மீர் பண்டிட்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதனால், அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இச்சம்பவம் குறித்து மத்திய, மாநில அரசுகளோ, நீதிமன்றமோ எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வேறு வழியின்றி அப்படியே விடுபட்டுவிட்டது’ என்று வாதிட்டார்.

தலைமை நீதிபதி கோபம்

அப்போது தலைமை நீதிபதி, ‘நீங்கள் அரசியல்வாதி போல் பேசி நாடகமாடுகிறீர்கள். நடந்த சம்பவங்கள் கவலைக்குரியவை என்பது உண்மைதான். ஆனால், கடந்த 27 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள். இப்போது அந்த வழக்குக்கான ஆதாரம் எங்கிருந்து கிடைக்கும். நீதிமன்றத்தை அணுகாமல் கூரை மீது ஏறி கூச்சல் போட்டால் எப்படி? தலைப்புச் செய்திகளில் வர வேண்டும் என்பதற்காக வழக்கு தொடர்கிறீர்களா? வெளியில் போய் பத்திரிகைகளில் பேட்டி கொடுங்கள்’ என்று கோபத்துடன் தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இச்சம்பவங்கள் நடந்து 27 ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்பில்லை என்ற காரணத்துக்காக மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x