Published : 28 Mar 2014 12:37 PM
Last Updated : 28 Mar 2014 12:37 PM
கர்நாடக மாநிலத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 559 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 6 முன்னாள் முதல்வர்கள், 15 முன்னாள் அமைச்சர்கள், நடிகை ரம்யா, நந்தன் நீலகேனி, கீதா சிவராஜ்குமார் போன்ற பிரபலங்களும் களத்தில் குதித்திருப்பதால் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரம் 17-ம் தேதி நடைபெறுவதால் கடந்த புதன்கிழமையுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவுற்றது. கர்நாடகாவில் உள்ள 28 மக்களவை தொகுதிகளில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ், பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி, இடது சாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் 559 பேர் 845 இடங்களில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக்கொள்வதற்கான கடைசி தேதி இன்றுடன் முடிகிறது. தேர்தல் நெருங்கி வருவதால் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். காங்கிரஸை சேர்ந்த முன்னாள் முதல்வர்களான தரம்சிங் பீதர் தொகுதியிலும், வீரப்பமொய்லி சிக்பளாப்பூர் தொகுதியிலும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
பாஜகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர்களான எடியூரப்பா ஷிமோகா தொகுதியிலும், சதானந்த கவுடா பெங்களூர் வடக்கு தொகுதியிலும் களமிறங்கியுள்ளனர். இதேபோல மஜதவைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடா ஹாசன் தொகுதியிலும், முன்னாள் முதல்வர் குமாரசாமி சிக்பாளப்பூர் தொகுதியில் வீரப்பமொய்லியை எதிர்கொள்கிறார். இரு முன்னாள் முதல்வர்கள் சிக்பளாப்பூரில் போட்டியிடுவதால் அங்கு பிரச்சாரம் சூடு பறக்கிறது.
இதேபோல மத்திய அமைச்சர் மல்லிகார்ஜூனா கார்கே கே.எச்.முனியப்பா, ம.ஜ.த.சார்பாக முன்னாள் அமைச்சர் தனஞ்செயகுமார், பாஜக சார்பாக முன்னாள் அமைச்சர்கள் அனந்தகுமார், ஸ்ரீராமலு மற்றும் ஆம் ஆத்மி சார்பாக முன்னாள் அமைச்சர் லீலா நாயக் உள்ளிட்ட 15 முன்னாள் அமைச்சர்கள் களத்தில் குதித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT