Last Updated : 13 Nov, 2014 10:02 AM

 

Published : 13 Nov 2014 10:02 AM
Last Updated : 13 Nov 2014 10:02 AM

வழக்குகளில் இருந்து தப்பிக்க கொலையுண்டதாக நாடகமாடியவர் சிக்கினார்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் வழக்கு விசாரணைகளிலிருந்து தப்பிப்பதற்காக, தான் கொலை செய்யப்பட்டதாக நாடகமாடியவர் 6 மாதங்களுக்குப் பின் உயிருடன் போலீஸாரிடம் சிக்கினார்.

உத்தரப் பிரதேச மாநிலம், ஏட்டாவைச் சேர்ந்தவர் பிர்ஜேஷ் (34). இவர் மீது வழிப்பறி, திருட்டு தொடர்பாக 20 வழக்குகள் ஏட்டா காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளன. இவருக்கு ராகுல் என்பவரின் மனைவியுடன் தவறான தொடர்பு இருந்தது.

வழக்கு விசாரணைகளிலிருந்து தப்பிப்பதற்காக திட்டமிட்ட பிர்ஜேஷ், வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடந்த ஏப்ரல் மாதம் ராகுலை மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று எரித்துக் கொன்றுவிட்டார். அந்த உடலின் பக்கத்தில் தனது வாக்காளர் அடையாள அட்டையை வைத்துவிட்டு பிர்ஜேஷ் தப்பி யோடிவிட்டார்.

இதையடுத்து, இறந்து கிடந்தது பிர்ஜேஷ் எனக் கருதிய போலீஸார், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரின் உடலை உறவினர் களிடம் ஒப்படைத்தனர். பிர்ஜேஷ் மீதான வழக்குகளை முடித்துக் கொள்வதாக நீதிமன்றத்தில் போலீஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து ராகுலின் மனைவியுடன் அலிகர் பகுதிக்குச் சென்று வசிக்கத் தொடங்கிய பிர்ஜேஷ், அங்கும் திருட்டுச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

சமீபத்தில் டாக்டர் ஒருவரின் காரை திருடிய பிர்ஜேஷ், அதை விற்பதற்காக லக்னோ சென்று கொண்டிருந்தார். அப்போது, வாகன சோதனையில் ஈடுபட்ட பரிதாபாத் போலீஸார், பிர்ஜேஷ் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்தனர். அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார் தீவிரமாக விசாரித்தனர்.

அப்போது, காரை திருடியதையும், தன் மீது ஏட்டாவில் ஏற்கெனவே பல்வேறு திட்டு வழக்குகள் இருப்பதையும், ராகுலை கொலை செய்து ஆள்மாறாட்டம் செய்ததையும் பிர்ஜேஷ் தெரிவித்துள்ளார். இதையடுத்து பிர்ஜேஷை பரிதாபாத் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சசிகாந்த் சர்மா நேற்று முன்தினம் கைது செய்தார்.

இது தொடர்பாக ஏட்டா போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீதான வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ள போலீஸார், ராகுலை கொலை செய்தது தொடர்பாக மேலும் ஒரு வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பிர்ஜேஷ் கைது செய்யப் பட்டதை அறிந்து தலைமறை வாகியுள்ள ராகுலின் மனைவியை போலீஸார் தேடி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x