Published : 10 Jun 2016 12:30 PM
Last Updated : 10 Jun 2016 12:30 PM

திஹார் சிறையில் சோட்டா ராஜனை கொல்ல முயற்சி: கூலிப்படையினர் 4 பேர் கைது

திஹார் சிறையில் உள்ள நிழல் உலக தாதா சோட்டா ராஜனை கொலை செய்ய முயற்சித்ததாக கூலிப்படையினர் 4 பேரை டெல்லி சிறப்பு போலீஸார் கைது செய்துள்ளனர். ஜூன் 3-ம் தேதியன்று கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த சோட்டா ராஜனை சர்வதேச போலீஸார் (இன்டர்போல்) உதவியுடன் கைது செய்தது இந்தியா. சோட்டா ராஜன் கடந்த நவம்பர் மாதம் முதல் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சோட்டா ராஜனை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக ரோஜர் ராபின்சன், ஜூனாயத், மனீஷ், யூனுஸ் ஆகிய 4 பேரை டெல்லி சிறப்பு போலீஸார் கைது செய்துள்ளனர். இதனை சிறப்பு போலீஸின் ஆணையர் அர்விந்த் தீப் உறுதி செய்துள்ளார்.

கைது செய்யப்பட்ட 4 பேரும் தாவூத் இப்ரஹிமின் கூட்டாளி சோட்டா ஷகீலுடன் இணைந்து சோட்டா ராஜனை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட 4 பேரும் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். சோட்டா ராஜன் சிறையில் இருந்து விசாரணைக்காக சோட்டா ராஜன் வெளியில் அழைத்துச் செல்லப்பட்டால் உடனே அவரை கொலை செய்ய 4 பேரும் திட்டம் தீட்டியிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், திஹார் சிறையில் அடிக்கடி ராஜனை சந்திக்கும் அவரது ஓட்டுநரையும் கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. சதித்திட்டம் குறித்து அனைத்துக் கோணங்களிலும் விசாரித்து வருவதாக காவல் ஆணையர் அர்விந்த் தீப் தெரிவித்துள்ளார்.

சோட்டா ராஜன் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்பதாலேயே அவரிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x