Published : 18 Jun 2017 05:20 PM
Last Updated : 18 Jun 2017 05:20 PM
கோவாவில் சட்டம், ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு அண்மையில் தடை விதித்தது. இதற்கு கேரளா, கர்நாடகா, மேற்குவங்கம், மேகாலயா உள்ளிட்ட மாநில அரசுகள் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாஜக ஆட்சி நடத்தும் கோவா அரசும் மாட்டிறைச்சி தடை விவகாரத்தில் மாற்றங்கள் செய்யக் கோரி வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஆன்மிக தலைவர் சாத்வி சரஸ்வதி அண்மையில் கோவாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர், மாட்டிறைச்சி சாப்பிடுகிறவர்களை பொதுஇடத்தில் தூக்கிலிட வேண்டும் என்று தெரிவித்தார். அவரது கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதனிடையே கோவா புரட்சி தினம் இன்று கொண்டாடப்பட்டது. ''போர்ச்சுகீசிய ஆட்சியாளர்களுக்கு எதிராக கோவா மக்கள் ஒன்றுபட வேண்டும்'' என்று கடந்த 1946 ஜூன் 18-ம் தேதி சுதந்திர போராட்ட தலைவர் ராம் மனோகர் லோஹியா அழைப்பு விடுத்தார். அந்த நாளை கோவா அரசு புரட்சி தினமாக அறிவித்து கொண்டாடி வருகிறது.
அதன்படி பனாஜியில் இன்று நடந்த கோவா புரட்சி தின விழாவில் முதல்வர் மனோகர் பாரிக்கர் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், ''மாட்டிறைச்சி தடை விவகாரத்தில் மக்களிடையே சில குழப்பங்கள் உள்ளன. இதில் சில குழப்பங்கள் வேண்டுமென்றே உருவாக்கப்படுகின்றன. வேறு சில குழப்பங்கள் அறியாமையால் ஏற்படுகின்றன.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கு பாஜக அரசு முன்னுரிமை அளிக்கிறது. சட்டம், ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT