Published : 20 Jun 2016 08:16 AM
Last Updated : 20 Jun 2016 08:16 AM
கர்நாடக அரசியலில் புதிய திருப் பமாக ஊழல் புகார்கள் மற்றும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய 14 அமைச்சர்களை முதல்வர் சித்தராமையா நேற்று அதிரடியாக நீக்கினார். அவர்களுக்கு பதிலாக 13 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
கர்நாடகாவில் 2018-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால் எதிர்க்கட்சி களான பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகியவை கட்சிக்குள் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வரு கின்றன. எனவே ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் கட்சியும் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. குறிப்பாக ஊழல் புகார்கள் மற்றும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய அமைச்சர்களை நீக்கிவிட்டு புதிய அமைச்சர்களை அமைச்சரவையில் சேர்க்க முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியாவும், துணைத் தலைவர் ராகுலும் ஒப்புதல் அளித் திருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் காங்கிரஸ் மேலிடத் திடம் வழங்கப்பட்ட பட்டியலின் அடிப்படையில் கம்ரூல் இஸ்லாம், சாமனூர் சிவசங்கரப்பா, வி.சீனிவாச பிரசாத், எம்.ஹெச்.அம்பரீஷ், வினய் குமார் சோராகே, சதீஷ் ஜர்கிஹோலி, பாபுராவ் சின்சன்சூர், சிவராஜ் சங்கப்பா தங்கடகி, எஸ்.ஆர்.பாட்டீல், மனோகர் தாசில்தார், கே.அபயசந்திர ஜெயின், தினேஷ் குண்டுராவ், கிம்மனே ரத்னாகர், பரமேஷ்வர் நாயக் ஆகிய 14 பேர் நேற்று அமைச்ச ரவையில் இருந்து நீக்கப்பட்டனர்.
13 புதிய அமைச்சர்கள்
அவர்களுக்கு பதிலாக முன்னாள் சபாநாயகர்களான காகோடு திம்மப்பா ரமேஷ் குமார் மற்றும் பசவராஜ் ராய ரெட்டி, ஹெச்.ஒய்.மெட்டி, தன்வீர் சேட், எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன், எம்.ஆர்.சீதாராம், சந்தோஷ் லாத், ரமேஷ் ஜர்கிஹோலி ஆகிய 9 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங் கார்கே, ருத்ரப்பா லாமணி, ஈஷ்வர் கந்த்ரே, பிரமோத் மத்வராஜ் ஆகிய 4 பேர் இணை அமைச்சர்களாகவும் சேர்க்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் நடந்த பதவியேற்பு விழாவில், 13 புதிய அமைச்சர்களுக்கும், ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதனால் 34 ஆக இருந்த கர்நாடக அமைச்சரவையின் பலம் 33 ஆக குறைந்துள்ளது.
அமைச்சரவை மாற்றம் குறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறும்போது, ‘‘கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில், முதல்வர் சித்தராமையா அமைச்சர வையில் மாற்றம் செய்துள்ளார். புதி தாக பதவியேற்ற அமைச்சர்கள் சட்டப் பேரவை தேர்தலை மனதில் கொண்டு பணியாற்ற வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்’’ என்றார்.
பேருந்துக்கு தீ வைப்பு
இதற்கிடையில், பதவியில் இருந்து நீக்கப்பட்ட 14 அமைச்சர்களும் தற்போது கடும் அதிருப்தி அடைந்துள் ளனர். அதை வெளிப்படுத்தும் வகையில் அம்பரீஷின் ஆதர வாளர்கள் மாண்டியா மாவட்டத்தில் பெங்களூரு - மைசூரு நெடுஞ் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். கம்ரூல் இஸ்லாமின் ஆதரவாளர்கள் கலாபர்கி மாவட்டத் தில் ஒரு பேருந்துக்கு தீ வைத்து வன்முறையில் இறங்கினர். மேலும் பெங்களூருவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் பலரும் தங்களது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 2 ஆண்டுகளே உள்ள நிலையில் கட்சிக்குள் வெடித்திருக்கும் இந்த அதிருப்தியால் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட வாய்ப்பி ருப்பதாகவும் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT