Last Updated : 19 May, 2017 02:31 PM

 

Published : 19 May 2017 02:31 PM
Last Updated : 19 May 2017 02:31 PM

எல்லையில் ராணுவ பலமும் வீரர்களின் தயார் நிலையும் திருப்தியளிக்கிறன: ஜேட்லி

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டால் அவர்களுக்கு தகுந்த பதிலடி தரும்வகையில் படைகள் ஆயத்த நிலையில் இருப்பது திருப்தியளிப்பதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளை அருண் ஜேட்லி இன்று (வெள்ளிக்கிழமை) ஆய்வு மேற்கொண்டார். ராணுவ கமாண்டர்களுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்தார்.

அண்மைக்காலமாக எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. எல்லையோர கிராமங்களையும் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் சிலர் உயிரிழந்தனர். இதனையடுத்து நவுசேரா உள்ளிட்ட எல்லையோர கிராமங்களில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று ஜேட்லி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். வான்வழியாக அவர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ராம்பூர் பகுதியில் உள்ள இந்திய ராணுவ முகாமுக்குச் சென்று அங்குள்ள வீரர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். எப்போதும் கண்காணிப்புடன் இருக்குமாறு அவர் வீரர்களுக்கு அறிவுறுத்தினார்.

எல்லையில் மேற்கொண்ட ஆய்வு குறித்து ஜேட்லி தனது ட்விட்டர் பக்கத்தில், "எல்லையில் ஆய்வு மேற்கொண்டேன். ராணுவ உயரதிகாரிகள், கமாண்டர்களுடன் ஆலோசனை நடத்தினேன். எல்லையில் படைகள் போதுமான அளவில் இருக்கின்றன. பாகிஸ்தான் அத்துமீறினால் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில் வீரர்கள் ஆயத்தமாக இருக்கிறார்கள். ராணுவ படை பலமும், வீரர்களின் தயார் நிலையும் திருப்தியளிப்பதாக இருக்கிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x