Last Updated : 20 Jul, 2016 06:34 PM

 

Published : 20 Jul 2016 06:34 PM
Last Updated : 20 Jul 2016 06:34 PM

மாயாவதியை தரக்குறைவாக விமர்சித்த தயா சங்கர் பதவி பறிப்பு: உ.பி. பாஜக அதிரடி

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை தரக்குறைவாக விமர்சித்த உ.பி. பாஜக துணைத்தலைவர் தயா சங்கர் சிங்கின் பதவியைப் பறித்து கட்சி மேலிடம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.

அவர் அனைத்து கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்படுவதாக உ.பி.பாஜக தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா தெரிவித்துள்ளார்.

தயாசங்கர், உ.பி. பாஜகவில் புதிதாக நியமிக்கப்பட்ட துணைத்தலைவர் ஆவார். இவர் கிழக்கு உத்திரப்பிரதேசத்தில் செய்தியாளர்கள் அதிர்ச்சியடையும் விதமாக மாயாவதியின் தேர்தல் அரசியலை ‘விபச்சாரத்துடன்’ ஒப்பிட்டு பேசியது கடும் சர்ச்சைக்குள்ளானதோடு அவரது பதவியையும் பறித்துள்ளது.

“கட்சித் தொகுதிகளை மாயாவதி அதிக பணம் கொடுப்பவர்களுக்கு விற்கிறார். யாராவது ரூ.1 கோடி கொடுத்தால் அவருக்கு தொகுதியை வழங்குவார், ஆனால் ஒரு மணி நேரம் கழித்து அதே தொகுதிக்கு வேறொருவர் ரூ.2 கோடி கொடுத்தால் அவருக்குக் கொடுப்பார், பிற்பாடு மாலை வேளையில் யாராவது ரூ.3 கோடி கொடுக்கிறேன் என்றால் அவருக்கு அந்தத் தொகுதியை அளிப்பார்” என்று கூறியதோடு கன்சிராமின் கொள்கைகளை விற்றுவிட்டார் மாயாவதி என்று பேசியதுதான் இப்போதைய பதவிப்பறிப்புக்குக் காரணமாகியுள்ளது.

இதனையடுத்து இவரது இந்தப் பேச்சுக்கு பாஜக மன்னிப்பு கேட்டது. அருண் ஜேட்லி மாநிலங்களவையில் இந்த தரக்குறைவான பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் அரசியலில் வார்த்தைப் பிரயோகங்களில் எச்சரிக்கையும் நாகரிகமும் தேவை என்று பாஜக-வினருக்கு கட்சி மேலிடம் சுற்றறிக்கையும் அனுப்பியது.

மாயாவதியும் தயாசங்கர் சிங்கின் தரக்குறைவான பேச்சிற்கு பதில் அளிக்கும் போது, “நான் திருமணம் செய்துகொள்ளவில்லை. நாட்டில் ஒடுக்கப்பட்டோர் அனைவரையும் என் குடும்பத்தினராக கருதுகிறேன். என்னுடைய நம்பிக்கை அறிவுரையாளர் கன்ஷிராமின் அறிவுரைகளை பின்பற்றி நலிவடைந்தோர் கொடுக்கும் அன்பளிப்பை மட்டுமே ஏற்றுக் கொள்கிறேன், தொழிலதிபர்களிடமிருந்து நான் கட்சி நிதி பெறுவதில்லை.

கண்டனம் தெரிவித்த ஜேட்லிக்கும் எதிர்க்கட்சியினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் என்னை அவர்களது மகளாகவும் சகோதரியாகவும் கருதுகின்றனர். இத்தகையோர் பேச்சுகளை ஊக்குவிக்குஜ் பாஜகவை நாடு ஒருபோதும் மன்னிக்கப்போவதில்லை” என்றார்.

இந்நிலையில் பாஜக இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு தயா சங்கர் சிங்கின் பதவியைப் பறித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x