Published : 14 Feb 2016 02:29 PM
Last Updated : 14 Feb 2016 02:29 PM

என் மகன் தேச விரோதி அல்ல: ஜே.என்.யு மாணவ சங்கத் தலைவரின் தந்தை

தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னைய குமாரின் தந்தை தன் மகன் எந்த வித தவறும் செய்யவில்லை, அவரை பலிகடாவாக்குகின்றனர் என்று கூறியுள்ளார்.

கன்னைய குமாரின் தந்தை ஜெய்சங்கர் சிங் கூறும் போது, “எனது மகன் தேச விரோதி கிடையாது, இந்துத்துவ அரசியலுக்கு எதிராக பேசிவருவதால் அவரை வேண்டுமென்றே பலிகடாவாக்குகின்றனர். அவர் எந்த வித தவறும் செய்யவில்லை. ஆகவே மன்னிப்பு என்ற கேள்விக்கே இடமில்லை” என்றார்.

கன்னைய குமாரின் தாயார், மீனாதேவி கூறும் போது, “பள்ளி நாட்களிலிருந்தே அரசியல் ஈடுபாடு கொண்டவன் அவன், ஆனால் நாட்டு நலனுக்கு எதிராக இதுவரை எதுவும் பேசியதில்லை” என்றார்.

கன்னைய குமாரின் பெற்றோர் பிஹார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் மஸ்லன்புர்-பிஹத் என்ற கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள அரதப்பழசான வீட்டில் வசித்து வருகின்றனர். சுவற்றில் ஆங்காங்கே நீல நிற சுண்ணாம்புப் பகுதிகள் உரிந்து தொங்க ஒரு பாலித்தீன் கவர் முழுதும் மருந்தும் மாத்திரைகளுமாக கன்னைய குமாரின் தந்தை தார்ப்பாய் ஒன்றில் அமர்ந்திருந்தார். இவர் சிறு விவசாயிதான், ஆனால், 2 ஆண்டுகளுக்கு முன்பாக இவரை பக்கவாத நோய் தாக்கியது. அதிலிருந்து அவர் படுத்தபடுக்கைதான். தாயார் மீனாதேவி அங்கன்வாடியில் பணியாற்றி வருகிறார். இவர் மாதம் ரூ.4,000 சம்பளம் பெற்று வருகிறார்.

தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ் கன்னைய குமார் தந்தை ஜெய்சங்கர் சிங்கை தொடர்பு கொண்ட போது, "என் மகன் ஒரு அப்பாவி. அவன் மீது எந்தத் தவறுமில்லை எனும்போது, அவன் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.

மேலும், மாணவர்கள் தேச-விரோத கோஷங்களை எழுப்பிய போது காண்பிக்கப்பட்ட வீடியோவில் தன் மகன் இல்லை என்றும், “நாட்டில் உள்ள ஆயிரமாயிரம் இளைஞர்கள் போலவே அவனும் தேசப்பற்று உள்ளவன் தான். ஆனால் இடதுசாரி கருத்தியலை பின்பற்றி வருகிறான். இந்துத்துவ அரசியலை எதிர்ப்பதால் பலிகடாவாக்கப்பட்டுள்ளான்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x