Published : 15 Dec 2013 12:00 AM
Last Updated : 15 Dec 2013 12:00 AM

பாஜக ஆட்சிக்கு வருவதை தடுப்போம் : பிரகாஷ் காரத்

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க மாட்டோம், பாஜக ஆட்சிக்கு வருவதை நாங்கள் தடுப்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கூட்டம் திரிபுரா தலைநகர் அகர்தலாவில் நேற்று நடைபெற்றது. அப்போது பிரகாஷ் காரத் நிருபர்களிடம் கூறியதாவது:

ஊழல் மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக காங்கிரஸ் அரசு நிராகரிக்கப்பட்டுள்ளதை 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. மேலும் பாஜக போன்ற மதவாத சக்திகள், ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளின் உதவியுடன் மத்தியில் ஆட்சிக்கு வர கடும் முயற்சி மேற்கொள்வதும் தெரிகிறது. நாங்கள் பாஜகவை ஆட்சிக்கு வரவிடமாட்டோம். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்க, காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத கூட்டணியை உருவாக்குவோம். இந்த கூட்டணி நிலைத்த, ஆற்றல் வாய்ந்த மாற்று அணியாக இருக்கும்.

காங்கிரஸ் கட்சிக்கு ஆதர வளிக்கும் பேச்சுக்கே இடமில்லை. வரும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற வாய்ப்பில்லை. அது மீண்டும் புத்துயிர் பெறுமா என்ற கேள்விக்கே இடமில்லை. பாஜக பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட பிறகு, தொழில் நிறுவனங்கள் அவருக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றன. மோடி ஆட்சிக்கு வருவதை தடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்றார் பிரகாஷ் காரத்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x