வருமானத்துக்கு அதிகமாக சொத்து: இமாச்சல பிரதேச முதல்வருக்கு அமலாக்கத் துறை சம்மன்
இமாச்சல பிரதேச மாநிலத்தில் 82 வயதாகும் முதல்வர் வீரபத்ர சிங் தலைமையில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடை பெற்று வருகிறது. இவர் கடந்த 2009- முதல் 2011-ம் ஆண்டு வரை மத்திய இரும்பு மற்றும் உருக்குத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, அவரும், அவரது குடும்பத்தினரும் வருமானத்துக்கு அதிகமாக ரூ.6.1 கோடி சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ. வழக்குத் தொடர்ந்தது. மேலும், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ரூ.14 கோடி சொத்துச் சேர்த்ததாக இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டது.
விசாரணையின் முடிவில், மொத்தம் ரூ.10 கோடி வருமானத் திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த தாக நீதிமன்றத்தில் சி.பி.ஐ. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் வீரபத்ர சிங், அவரது மனைவி பிரதிபா சிங் உள்பட 9 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதே வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையும் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பரில் வீரபத்ர சிங் உள்ளிட்டோர் மீது வழக்குத் தொடர்ந்தது. வழக்கு விசாரணைக்கு வரும் 13-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு வீரபத்ர சிங்குக்கு, அமலாக்கத்துறை நேற்று சம்மன் அனுப்பியுள்ளது.
