Published : 08 Nov 2013 10:30 AM
Last Updated : 08 Nov 2013 10:30 AM

அரசியலில் போட்டி உண்டு எதிரிகள் இல்லை: சச்சின் பைலட்

இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கிடையே போட்டிகள் உண்டு. ஆனால் அதற்காக நாங்கள் ஒருவருக்கு ஒருவர் எதிரிகளாக இருக்கவில்லை என்று மத்திய நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சர் சச்சின் பைலட் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் தேசிய அளவி லான நிறுவனச் செயலர்களுக்கான மூன்று நாள் மாநாடு வியாழக்கிழமை தொடங்கியது. மத்திய அமைச்சர் சச்சின் பைலட், இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

1956ம் ஆண்டு இயற்றப்பட்ட நிறுவனங்கள் சட்டம் கடந்த 60 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்து வந்தது. காலத்துக்கு ஏற்றாற் போல் ஒவ்வொரு நாட்டின் வணிக நடவடிக்கைகளும் மாறுகின்றன. அதற்கு ஏற்றாற் போல் அந்த வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சட்டங்களும் பல்வேறு நாடுகளில் மாற்றப்பட்டு வருகின்றன.

மாறி வரும் சூழலுக்கு ஏற்ப நம்முடைய நிறுவனங்கள் சட்டத்திலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாகப் போராடினோம். அந்தப் போராட்டத்தின் முடிவாக 'நிறுவனங்கள் சட்டம் 2013' கொண்டு வரப்பட்டது. ஆனால் அதை நடைமுறைப்படுத்த நாடாளுமன்றத்தில் சுமார் எட்டு மாத காலம் போராட வேண்டி இருந்தது.

44 அரசியல் கட்சிகள்

இந்தப் சட்டத்துக்கு அனுமதி வழங்குவதற்கு நாடாளுமன்றத்தில் உள்ள 44 அரசியல் கட்சிகளின் எதிர்ப்புகளுக்குப் பதில் சொல்ல வேண்டி இருந்தது. நாடாளுமன்றத்தில் சிறப்பு நிலைக் குழுவின் தலைவராக பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒருவர் இருந்தார்.

அவரிடத்திலும் எங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துரைத்து சம்மதம் பெற வேண்டி இருந்தது. இது அத்தனையும் தனிப்பட்ட ஒரு நபருக்காகவோ, தனி ஒரு நிறுவனத்துக்காகவோ நடத்தப்படவில்லை. மாறாக, நாட்டின் நலனுக்காக இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் மூலம் புரிந்து கொள்ள வேண்டியது அரசியல் கட்சிகளுக்கு இடையில் போட்டி உண்டே தவிர, எதிரிகள் இல்லை என்பதுதான்.

வேலை வாய்ப்புகள்

நம் நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தொகை விவசாயத்தில் இருக்கிறார்கள். ஆனால் நாட்டின் மொத்த உற்பத்தியில் அதன் பங்களிப்பு வெறும் 14 சதவிகிதம்தான். இந்த விவசாயிகளை உற்பத்தித் துறைக்கு மாற்ற வேண்டும். அப்போது நம் நாட்டின் மொத்த உற்பத்தி அதிகரித்து, பொருளாதாரம் சிறந்த முறையில் இருக்கும்.

நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டி உள்ளது. இதை அரசு நிறுவனங்கள் மட்டுமே பூர்த்தி செய்ய இயலாது. தனியார் துறைகளும் இதற்கு முன் வர வேண்டும்.இவ்வாறு சச்சின் பைலட் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x