Published : 01 May 2014 12:52 PM
Last Updated : 01 May 2014 12:52 PM

தயாளு, கனிமொழி, ராசா மீதான அமலாக்கப்பிரிவு குற்றப்பத்திரிகையை ஏற்பது குறித்து நாளை தீர்ப்பு: 2ஜி வழக்கில் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு, மகள் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா ஆகியோர் மீது அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை ஏற்பது குறித்து சிபிஐ நீதிமன்றம் வரும் 2-ஆம் தேதி தீர்ப்பளிக்க உள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு, மகள் கனி மொழி, உறவினர் அமிர்தம், முன் னாள் மத்திய அமைச்சர் ராசா உள்ளிட்ட 10 பேர் மீதும், கலைஞர் டிவி, டிபி ரியால்டி உள்ளிட்ட ஒன்பது நிறுவனங்கள் மீதும் அமலாக்கப்பிரிவு சார்பில் கடந்த 21-ஆம் தேதி சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அமலாக்கப்பிரிவு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜசேகர் ராவ் வாதிட்டதாவது:

கடந்த 2008-ஆம் ஆண்டு டிபி ரியால்டி நிறுவனத்திடம் இருந்து சில நிறுவனங்கள் வழி யாக இரண்டு நாட்களில், ரூ.200 கோடி பணம் கலைஞர் டி.விக்கு கைமாறி உள்ளது. இப்பணம் 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் பெறு வதற்காக தரப்பட்டுள்ளது. இந்த பண பரிவர்த்தனைக்கான காரணம், ஆவணங்கள் எதுவும் அந்த நிறுவனங்களிடம் இல்லை.

ராசாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியதும், இந்தப் பணம் மீண்டும் அதே வழியில் வட்டியுடன் மின்னல் வேகத்தில் திரும்பத் தரப்பட்டுள்ளது. தொழில்ரீதியான பண பரிவர்த்தனை என்பதைப் போல் இதைக் காட்ட முயன்றுள்ள னர். முன்தேதியிட்டு ஆவணங்களை போலியாகத் தயாரித்துள்ளனர். இந்த பண பரிவர்த்தனைகளுக்கு முறையான வருமான வரி ஆவணங் கள் இல்லை. “டிடிஎஸ்” உள்ளிட்ட வரிப்பிடித்தம் செய்யப்படவில்லை.

சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின்படி, தெரிந்தோ, தெரியாமலோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ குற்றச் செயலுக் கான பொருளை பரிமாற்றம் செய்வது தண்டனைக்குரியதாகும். எனவே, குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு ராஜசேகர் ராவ் வாதிட்டார்.

வாதத்தைக் கேட்ட நீதிபதி ஓ.பி.சைனி, “அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை ஏற்பது குறித்து மே 2-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும்,” என்று உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x