Last Updated : 22 Jan, 2014 12:00 AM

 

Published : 22 Jan 2014 12:00 AM
Last Updated : 22 Jan 2014 12:00 AM

கேஜ்ரிவாலின் போராட்டத்தை எதிர்த்து பொதுநல மனு- விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை வரும் வெள்ளிக்கிழமை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லி மாநில அரசின் உத்தரவை ஏற்று செயல்பட மறுத்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையின் கட்டுப்பாட்டை மாநில அரசின் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சகத்தை எதிர்த்து முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் போராட்டம் நடத்தி வருகிறார். இந்த போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை மூத்த வழக்கறிஞர்கள் எம்.எல்.சர்மா, என்.ராஜாராமன் ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணை வரும் வெள்ளிக்கிழமை நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம், நீதிபதி ரஞ்சன் கோகோய் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்தது.

இது குறித்து மனுதாரர்களில் ஒருவரான எம்.எல்.சர்மா ‘தி இந்து’ செய்தியாளரிடம் கூறுகையில், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதாக உறுதிமொழி கூறி பதவி ஏற்றவர், டெல்லி மாநில முதல்வர் கேஜ்ரிவால். இப்போது அங்கு அமல்படுத்தப்பட்டுள்ள 144 தடை உத்தரவை அவரே மீறுகிறார்.

வெளிநாடுகளைச் சேர்ந்த 4 பெண்கள் தங்கியிருந்த வீட்டில் புகுந்து சிலர் தாக்குதல் நடத்தியது தொடர்பாக நீதிமன்ற உத்தரவின்படி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கிலிருந்து மாநில சட்டத்துறை அமைச்சர் சோம்நாத் பாரதியை காப்பாற்றுவதற்காகத்தான் இந்த போராட்டம் நடைபெறுகிறது” என்றார். மற்றொரு மனுதாரரான என்.ராஜாராம் கூறுகையில், “கேஜ்ரிவாலின், போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும். இது குறித்து டெல்லி காவல்துறை ஆணையர், துணை நிலை ஆளுநர், குடியரசுத் தலைவர் ஆகியோரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, இந்த பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x