Published : 17 Jun 2017 11:13 AM
Last Updated : 17 Jun 2017 11:13 AM

தனி மாநிலம் கோரும் ஜிஜேஎம்: எம்எல்ஏ மகன் கைதால் டார்ஜிலிங்கில் பதற்றம்

தனி மாநிலம் கோரி ஜிஜேஎம் கட்சி நடத்தும் காலவரையற்ற போராட்டத்தில் போலீஸார் அக்கட்சியின் எம்எல்ஏவின் மகனைக் கைது செய்துள்ளதால் டார்ஜிலிங்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.

டார்ஜிலிங் எம்எல்ஏ அமர் சிங் ராயின் மகன் விக்ரம் ராய் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறும்போது, வன்முறையில் விக்ரம் ராய்க்கும் தொடர்பிருப்பதால் கைது செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது குறித்துப் பேசிய விக்ரம் ராய் குடும்பத்தினர், ''சனிக்கிழமை அதிகாலையில் டார்ஜிலிங் வீட்டில் இருந்து விக்ரம், போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டார்'' என்றனர்.

போராட்டப் பின்னணி

மேற்கு வங்க மாநிலத்தில் வங்க மொழி திணிப்பை எதிர்த்தும், கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தியும் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) அமைப்பு கடந்த 12-ம் தேதி முதல் காலவரையற்ற முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக குறிப்பாக டார்ஜிலிங் மலைப் பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் பரவின. போராட்டக்கார்களுக்கும், போலீ ஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சோதனைச் சாவடி, கார் உள்ளிட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பிஜான்பரியில் உள்ள பொதுப்பணித் துறையின் பங்களா, அடையாளம் தெரியாதவர்களால் தீவைத்துக் கொளுத்தப்பட்டது.போராட்டத்தில் ஈடுபட்ட பலரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

’இறுதி போருக்கு தயாராகுங்கள்’

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் சகஜ நிலை திரும்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாநில அரசுக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா தலைவர் பிமல் குரூங், இறுதிப் போருக்குத் தயாராகுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x