Published : 06 Sep 2016 12:15 PM
Last Updated : 06 Sep 2016 12:15 PM
இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு இந்திய தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது.
ஜம்மு - கஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லை பகுதியில் நடத்திய இரண்டாவது அத்துமீறல் இதுவாகும்.
பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் குறித்து செவ்வாயக்கிழமை ராணுவ செய்தித்தொடர்பாளர் கூறும்போது, "நள்ளிரவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஜம்மூ- காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய நிலைகளை குறி வைத்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.
பாகிஸ்தான் ராணுவம் தானியங்கி ஆயுதங்கள், கனரக வாகனங்களை கொண்டு திறந்தவெளி தாக்குதலை பூஞ்ச் பகுதியில் நிகழ்த்தினர்.இதற்கு இந்திய தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. இந்திய தரப்பில் பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. இரு தரப்புக்கும் இடையே சண்டை தொடர்ந்து நடந்து வருகிறது" என்றார்.
முன்னதாக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஜம்மு-காஷ்மீரின் அக்ஹ்னூர் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. ஆகஸ்ட் 14 தேதி பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நிகழ்த்திய தாக்குதலில் 50 வயது பெண்மணி ஒருவர் மரணம் அடைந்தார்.
கடந்த வருடத்தில் மட்டும் இந்திய எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு பொதுமக்களில் 16 பேர் பலியாகினர். 71 பேர் காயமடைந்தனர்.
இதுவரை எல்லை பகுதியில் மட்டும் 253 அத்துமீறல் நிகழ்வுகள் நடந்துள்ளன. எல்லையில் நிகழும் அத்துமீறல் சம்பவங்களால் கிட்டதட்ட 8000 பேர் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT