Published : 16 Apr 2017 11:19 AM
Last Updated : 16 Apr 2017 11:19 AM
பெட்ரோல், டீசல் விலைகளை நேற்றிரவு பெட்ரோலிய நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. பன்னாட்டுச் சந்தை நிலவரங்களுக்கேற்ப இந்த விலை உயர்வு மேற்கொண்டதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.39-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.04-ம் அதிகரிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் 1-ம் தேதி பெட்ரோல் விலை ரூ.4.85 குறைக்கப்பட்டது, டீசல் விலை ரூ.3.41 குறைக்கப்பட்டதன் பின்னணியில் இந்த விலை உயர்வு நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவிப்பில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.39 (மாநில வரிகள் இல்லாமல்), டீசல் விலை ரூ.1.04 (மாநில வரி இல்லாமல்) உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஞாயிறு நள்ளிரவு முதலே இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
மதிப்புக் கூட்டு வரியான வாட்-ஐ சேர்த்தப் பிறகே உண்மையான பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிலவரம் தெரியவரும். டெல்லியில் தற்போது லிட்டர் பெட்ரோல் விலை ரூ.66.29 ஆக உள்ளது, டீசல் விலை ரூ. 55.61-ஆக உள்ளது.
“தற்போதைய பன்னாட்டு விலை நிலவரப்படியும், அமெரிக்க டாலரின் செலாவணி மதிப்பு மாற்றத்தின் அடிப்படையிலும் இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டது” என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.
விரைவில் தினசரி அடிப்படையில் பெட்ரொல், டீசல் விலைகளை நிர்ணயம் செய்யப்போவதாகவும், இது பாண்டிச்சேரி, ஜாம்ஷெட்பூர், உதய்பூர், சண்டிகார், வைசாக் ஆகிய 5 நகரங்களில் நடைமுறைப்படுத்தப்படலாம் என்று ஐஓசி அறிவித்திருந்தது.
இதன் விளைவுகளை ஆராய்ந்து பிறகு நாடு முழுதும் தினப்படி விலையை மாற்றம் செய்யும் திட்டம் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT