Published : 19 Dec 2013 12:00 AM
Last Updated : 19 Dec 2013 12:00 AM

ஆந்திர வன அதிகாரிகள் கொலை: கைது செய்தவர்களை ஜாமீனில் எடுக்க திருப்பதியை முற்றுகையிட்ட உறவினர்கள்

ஆந்திர மாநிலத்தில் வனத்துறை யினர் கொல்லப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை ஜாமீனில் எடுப்பதற்காக அவர்களது உறவினர்கள் திருப்பதியை முற்றுகையிட்டுள்ளனர்.

திருப்பதி, சேஷாசலம் வனப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை, வனத்துறை அதிகாரிகள் ஸ்ரீதர், டேவிட் ஆகியோர், செம்மரக் கடத்தல் கும்பலால் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் 20-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் படுகாயமடைந்து திருப்பதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றனர். இதில் ரமணய்யா, சந்திரசேகர் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் 400க்கும் மேற்பட்ட செம்மரம் வெட்டும் கூலித் தொழிலாளர்கள் பிடிபட்டனர். இதில் 103 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இவர்களை வரும் 31-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி நாக வெங்கட லட்சுமி உத்திரவிட்டார். இதனைத் தொடர்ந்து அனைவரும் கடப்பா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, சிறையில் அடைக்கப்பட்டவர்களை ஜாமீனில் எடுப்பதற்காக அவர்களது உறவினர்கள் திருப்பதியை முற்றுகையிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x