Published : 02 Jun 2017 01:04 PM
Last Updated : 02 Jun 2017 01:04 PM

கேரள பயணத்தில் கிறிஸ்தவர்களின் நல்லெண்ணத்தைப் பெற திட்டமிடும் அமித் ஷா

கேரள கிறிஸ்தவர்களிடையே நல்லுறவை வளர்க்கும் விதமாக பாஜக தலைவர் அமித் ஷா கேரளாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

மாட்டிறைச்சி தடை குறித்த எதிர்ப்பலைகள் கேரளத்தில் பெருகி வரும் சூழலில், வரும் சனிக்கிழமை அன்று தன் 3 நாட்கள் கேரள சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறார் அமித் ஷா.

வரும் 2019 மக்களவை தேர்தலை குறி வைத்து பாஜக செயல்பட தொடங்கியுள்ளது. இந்த பயணத்தின் முதல் சந்திப்பாக சனிக்கிழமை அன்று கொச்சியில் ஆயர்களைச் சந்திக்க உள்ளார். இதன்மூலம் கேரளத்தின் 18- 20% வாக்கு வங்கி உள்ள கிறிஸ்தவ மதத்தினரின் ஆதரவைப் பெற அமித்ஷா திட்டமிட்டுள்ளார்.

அப்போது கிறிஸ்தவ சமூகத்துக்கும், பாஜகவுக்கும் இடையே ஏராளமான பொதுப்பண்புகள் இருப்பதாகக் கூறப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதம் மாறும் போக்கு

சமீபத்தில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்த கேரள இளைஞர்களில் இருவர் கிறிஸ்தவர்கள். இவர்கள் கிறிஸ்தவத்தில் இருந்து இஸ்லாமுக்கு மாறி இருக்கின்றனர். இதனால் மதம் மாறுதல் கவனத்துக்குரிய விஷயமாக மாறி இருக்கிறது. இதைப் பயன்படுத்திக் கொள்ள பாஜக எண்ணுகிறது.

அத்துடன் மாட்டிறைச்சி தடைக்கு எதிராக இளம் எருதைப் பலியிட்ட இளைஞர் காங்கிரஸார் குறித்த பிரச்சினையையும் முன்னிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் அதிகம் மாட்டிறைச்சி உட்கொள்ளப்படும் கேரளத்தில், மாட்டிறைச்சி விவகாரத்துக்குப் பிறகும், பாஜகவால் கிறிஸ்தவர்களின் நல்லெண்ணத்தைப் பெறுவது சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது.

2019 மக்களவைத் தேர்தலுக்கு கேரளத்தின் வெற்றியும் பாஜகவுக்கு முக்கியம். 2016 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கி 16 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆனால் அதன் மூலம் ஒரு சீட்டை மட்டுமே வெல்ல முடியும்.

மோடி அலை வீசுமா?

2014-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் வீசிய 'மோடி அலை' 2019 தேர்தலிலும் எதிரொலிக்கும் என பாஜக நம்புகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்களது வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் எனவும் பாஜக எதிர்பார்க்கிறது.

ஒடிசாவின் புவனேஷ்வரில் கடந்த ஏப்ரல் 16-ல் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 110 நாள் சுற்றுப்பயணத்தை அமித்ஷா தொடங்கியுள்ளார்.

இருமுறை சுற்றுப் பயணம்

குறிப்பாக ஒடிசா, குஜராத், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இருமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் அமித் ஷா திட்டமிட்டுள்ளார். அவரது இந்தப் பயணம் செப்டம்பர் வரை தொடர உள்ளது.

அமித் ஷா ஜூன் 3-ம் தேதி திருவனந்தபுரத்தில் கேரள சுற்றுப்பயணத்தை முடித்துக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x