Published : 30 Oct 2014 11:34 AM
Last Updated : 30 Oct 2014 11:34 AM

சுப்பிரமணியன் சுவாமி வழக்கு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கில், தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சுவாமி மீதான கிரிமினல் அவதூறு வழக்குக்கு தடை விதித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்துள்ள அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்துள்ள மனு இன்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

சுப்பிரமணியன் சுவாமி மனு விபரம்:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக நான் தேர்தலில் பிரச்சாரம் செய்தேன். அதனால், என் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக வழக்கு தொடர்ந்து வருகிறார்.

என் மீது சென்னை முதன்மை மாவட்ட மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் சென்னை மாநகர அரசு வழக்கறிஞர் மூன்று அவதூறு வழக்குகளை தொடர்ந்துள்ளார்.

உலக நாடுகளில் அவதூறு சட்டம் மாற்றி அமைக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் இச்சட்டம் பேச்சுரிமையை ஒடுக்க, குறிப்பாக பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் வகையில் இருப்பதால் இந்திய தண்டனைச் சட்டம் 1860-ன் பிரிவு 21-ஐ ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தலைமை நீதிபதி எச்.எல்.தத்து அடங்கிய அமர்வு முன்பு நேற்று ஆஜரான சுப்பிரமணியன் சுவாமி ‘என் மீதான அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்துள்ளேன். அவ்வழக்கை உடனே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று கோரினார்.

அதற்கு தலைமை நீதிபதி, ‘உங்கள் மனுவை படித்துப் பார்த்தேன். அதை சிறப்பு அமர்வு விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். உங்கள் மனு வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’ என்று தெரிவித்தார். அப்போது சுப்பிர மணியன் சுவாமி, ‘அதற்குள் என் மீதான வழக்குகளில் இருந்து சம்மன் அனுப்பி விட்டால் என்ன செய்வது?’ என்றார்.

அதற்கு தலைமை நீதிபதி, ‘அப்படி ஏதாவது நடந்தால், எங்களிடம் தெரிவியுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்று உறுதிஅளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x