Published : 17 Sep 2016 05:02 PM
Last Updated : 17 Sep 2016 05:02 PM

கர்நாடக - தமிழக எல்லையில் அன்பூட்டிய உணவு!

காவிரி பிரச்சினையில் கர்நாடகா - தமிழ்நாடு எல்லையோரத்தில் கலவரம் வெடித்தபோது சிலர் அன்பையும் விதைத்து வந்துள்ளனர்.

காவிரி பிரச்சினையின்போது கர்நாடகா - தமிழ்நாடு எல்லையோரத்தில் அமைந்துள்ள அத்திப்பள்ளி பகுதியில் வாங்க, பன்னி (கன்னடத்தில் வாருங்கள் என்று அர்த்தம்) என்று தமிழும், கன்னடமும் இரண்டும் சேர்ந்து அன்போடு ஒலித்துக் கொண்டிருந்தது. அவர்கள் சிரித்த முகத்துடன் வழங்கும் இலவச உணவிலிருந்து வந்த மணம் அந்த வழியே செல்லும் சுற்றுலா பயணிகளைக் கவரத் தவறவில்லை.

தமிழக பகுதியான ஓசூரின் சுசூவாடி கிராமத்திலிருந்தும், கர்நாடகாவின் அத்திப்பள்ளி கிரமத்திலிருந்து பத்து பேர் கொண்ட நபர்கள் காவிரி பிரச்சினையில் கர்நாடகா, தமிழ்நாடு எல்லையோரத்தில் எழுந்த பதற்றத்தை தணிக்க உணவை காரணியாக கையாண்டு உள்ளனர்.

இது குறித்து அக்குழுவில் ஒருவரான கோவிந்தராஜ் கூறும்போது, "உணவே அனைவரையும் ஒன்றுபடுத்தும் காரணி. இந்த உணவு பரிமாறுதலும் ஒருவித ஒற்றுமைக்கான தூதுதான். இரு மாநிலத்தின் அரசியல்வாதிகளும் நீருக்காக சண்டையிடுவதற்கு அப்பாவி மக்கள்தான் பாதிக்கப்படுகின்றனர்" என்றார்.

உணவு விடுதிகள் மூடல்

அத்திப்பள்ளி கிராமத்தின் முனிராஜ் கூறும்போது, "கடந்த சில நாட்களாக கர்நாடகா, தமிழ்நாட்டின் எல்லையோரத்தில் இருந்த கடைகளும், ஓட்டல்களும் மூடப்பட்டன. இதனால் பலர் உணவு இல்லாமல் தவித்தனர். இதனால் நாங்கள் பெரிய தண்ணீர் தொட்டிகள் மற்றும் உணவுகளை ஏற்பாடு செய்து அவர்களுக்கு வழங்கினோம்".என்றார்.

இவர்களின் செயலை பார்த்து அந்த வழியே சென்ற பயணி சரஸ்வதி கூறியது "அவர்கள் தொடர்ந்து கர்நாடகா, தமிழ் நாடு எல்லையோரத்தில் வழியே செல்லும் மக்களை அழைத்து உணவளித்தனர். அவர்களது இந்த முயற்சி அனைவருக்கும் முன் உதாரணம் ஆகும். இவர்களின் இந்த மனிதாபிமான செயல்களுக்கு மக்கள் தங்கள் அன்பு கலந்த நன்றியை தெரிவித்துச் சென்றனர்" என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x