Published : 20 Jan 2017 09:17 AM
Last Updated : 20 Jan 2017 09:17 AM

அதிகாரிகள் மிடுக்காக உடை அணிய தலைமை தேர்தல் ஆணையம் அறிவுரை

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மிடுக்காக உடை அணியுமாறும் நேரம் தவறாமல் செயல்படுமாறும் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கி உள்ளது.

உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி 4 முதல் மார்ச் 8 வரை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் ஒரு கடிதம் அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

தேர்தல் நடைபெறும் மாநிலங்களில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டங்களை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. இதுவரை நடைபெற்ற கூட்டங்களில் பங்கேற்ற சில அதிகாரிகளிடம் சில குறைகள் இருந்ததைக் காண முடிந்தது. தேர்தல் அதிகாரிகள் தங்களுடைய பொறுப்பை சரியாக செய்தால் மட்டும்போதாது.

நேரம் தவறாமை உள்ளிட்ட நல்லொழுக்கத்தைக் கடைபிடிப்பதுடன் மிடுக்காக உடை அணிய வேண்டும். எல்லா நேரமும் நெறிமுறைகளைப் பின்பற்றி குறைகூற முடியாத வகையில் செயல்பட வேண்டும்.

மேலும் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்க வரும்போது தேவையான விவரங்களைச் சேகரித்து வர வேண்டும். தேர்தல் ஆணைய குழுவினரிடம் அமைதியான முறையிலும் மரியதையுடனும் நடந்துகொள்ள வேண்டும். இதுகுறித்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x