Published : 05 Jun 2016 12:11 PM
Last Updated : 05 Jun 2016 12:11 PM
பிஹாரில் பிளஸ் 2 தேர்வில் முக்கிய இடம் பிடித்த மாணவர்களுக்கு நடத்தப்பட்ட மறு தேர்வின் அடிப்படையில், 2 மாணவர்களின் தேர்வு முடிவை மாநில பள்ளி தேர்வு வாரியம் (பிஎஸ்இபி) நேற்று ரத்து செய்தது.
இதுகுறித்து பிஎஸ்இபி தலைவர் லால்கேஷ்வர் பிரசாத் சிங் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
பிளஸ் 2 தேர்வில் முக்கிய இடம்பிடித்த 14 பேருக்கு 3-ம் தேதி மறு தேர்வு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் பங்கேற்றனர். உடல்நலக்குறைவால் ரூபி ராய் மட்டும் கலந்து கொள்ளவில்லை. இவர் வரும் 11-ம் தேதி மறு தேர்வுக்கு ஆஜராவார்.
இந்தத் தேர்வில், அறிவியல் தேர்வில் முதலிடம் பிடித்த சவுரவ் ஷ்ரேஸ்தா மற்றும் இதே பாடத்தில் முக்கிய இடம் பிடித்த ராகுல் குமார் ஆகியோரின் செயல்திறன் மோசமாக இருந்தது. இதையடுத்து இந்த 2 பேரின் தேர்வு முடிவும் ரத்து செய்யப்படுகிறது.
மறு தேர்வில் பங்கேற்ற மற்ற 11 மாணவர்களும் தங்கள் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினர். இதையடுத்து அவர்களது தேர்வு முடிவு ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
மேலும் தேர்வு முடிவு ரத்து செய்யப்பட்ட மாணவர்கள் படித்துவந்த பிஷுன் ராய் பள்ளியின் அங்கீகாரம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. இந்தப் பள்ளியில் நடைபெற்ற முறைகேடு குறித்து விசாரிக்க பாட்னா உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். தேர்வு முடிவு ரத்து செய்யப்பட்ட சவுரவ், ராகுல் மற்றும் மறு தேர்வில் பங்கேற்காத ரூபி ராய் ஆகிய மூவரும் வைஷாலியில் உள்ள பிஷுன் ராய் பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT