Published : 23 May 2017 09:22 AM
Last Updated : 23 May 2017 09:22 AM

ஆந்திராவில் அரசியல் கொலை அதிகரித்து விட்டது: ஆளுநரிடம் ஜெகன்மோகன் புகார்

ஆந்திராவில் அரசியல் படுகொலைகள் அதிகரித்து விட்டதாகவும், அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மாநில ஆளுநர் நரசிம்மனிடம், எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று மனு அளித்தார்.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம், பத்தி கொண்டா சட்டமன்ற தொகுதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் நாராயண ரெட்டி நேற்று முன்தினம் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, நேற்று மாநில ஆளுநர் நரசிம்மனை சந்தித்து புகார் மனு அளித்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

கடந்த 3 ஆண்டுகளில் ஆளும் தெலுங்கு தேச கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்க்கட்சி நிர்வாகிகள் 29 பேரை படு கொலை செய்துள்ளனர். இதேபோல், செம்மர கடத்தல் கும்பல் என கூறி, அப்பாவி கூலித் தொழிலாளர்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளனர்.

முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் அரசியல் படுகொலைகள் அதிகரித்து விட்டன. எதிர்க்கட்சியினரும், எதிர்த்து பேசுபவர்களும் இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் முதல்வர் செயல்படுகிறார். எனவே இது தொடர்பாக ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புகார் மனு அளித்துள்ளோம்.

இவ்வாறு ஜெகன்மோகன் ரெட்டி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x