Published : 24 Nov 2013 10:00 AM
Last Updated : 24 Nov 2013 10:00 AM

பெண் வேவுபார்ப்பு விவகாரம்: மோடி மீது சிபிஐ விசாரணை தேவை

இளம்பெண் வேவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி அந்த மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் சர்மா உச்ச நீதிமன்றத்தில் சனிக்கிழமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அப்போது விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை தொடர்ந்து அவர் இப்போது பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதனுடன் குஜராத் முன்னாள் அமைச்சர் அமித் ஷாவும் தீவிரவாத எதிர்ப்புப் படைத் தலைவர் சிங்காலும் பேசிய தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய 150 பக்க அறிக்கையையும் அவர் இணைத்துள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டில் பெங்களூரைச் சேர்ந்த 27 வயது பெண் பொறியாளரை குஜராத் தீவிரவாத எதிர்ப்புப் படையினர் பின்தொடர்ந்து வேவு பார்த்ததாக கோப்ராபோஸ்ட், குலைல் ஆகிய இணையதள ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டன. குஜராத் மேலிட உத்தரவின்பேரிலேயே இளம்பெண் வேவு பார்க்கப்பட்டதாக அந்த இணையதளங்கள் குற்றம் சாட்டின.

இந்நிலையில், குஜராத் அரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் சர்மா, இளம்பெண் விவகாரம் காரணமாகவே தன் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கோப்ராபோஸ்ட் வெளியிட்டுள்ள தொலைபேசி உரையாடல்கள் தொடர்பாக முதல்வர் நரேந்திர மோடி, முன்னாள் அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

நரேந்திர மோடி, பெங்களூர் பெண் குறித்த விவகாரம் எனக்குத் தெரியும். அதன் காரணமாகவே என் மீது பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதை தவிர எனது தம்பி குல்தீப் சர்மா, குஜராத்தில் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியாகப் பணியாற்றுகிறார். 2002 குஜராத் கலவரத்தில் மோடியின் பல்வேறு தவறான செயல்பாடுகளை அவர் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார். இதுவும் என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு முக்கிய காரணம். என் மீதான அனைத்து வழக்குகளையும் வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று தனது மனுவில் பிரதீப் சர்மா கோரியுள்ளார்.

இதனிடையே, தனியார் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியி ருப்பது:

2004-ம் ஆண்டில் பவ நகரில் நடைபெற்ற பூங்கா திறப்பு விழாவில் முதல்வர் மோடி பங்கேற்றார். அந்த விழாவில்தான் பெங்களூர் பெண் பொறியாளரை முதல்வருக்கு நான் அறிமுகம் செய்தேன். அதன்பின்னர் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது.

தனது மகளுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி முதல்வரிடம் கேட்டுக் கொண்டதாக அவரது தந்தை அறிக்கை வெளியிட்டிருப்பதில் உண்மை இல்லை. மிரட்டலின்பேரிலேயே அவர் அந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x