Published : 27 Dec 2013 12:00 AM
Last Updated : 27 Dec 2013 12:00 AM

விசாரணையை நீதிமன்றத்தில் சந்திப்போம் - பாஜக அறிவிப்பு

இளம்பெண்ணை வேவு பார்த்த விவகாரத்தில் மத்திய அரசின் விசாரணையை நீதிமன்றத்தில் சந்திக்க போவதாக பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்தக் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான அருண்ஜேட்லி டெல்லியில் கூறியதாவது:

இளம்பெண்ணை வேவு பார்த்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விசாரணைக் கமிஷன் அமைத்துள்ளது. இது மாநிலங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல். கூட்டாட்சி முறைக்கு எதிரானது. இந்த செயலுக்கு மற்ற மாநிலங்களின் முதல்வர்களும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என நம்புகிறேன். இதை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம்.

அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் தோல்வியில் இருந்து காங்கிரஸ் கட்சி பாடம் கற்றுக் கொள்ளவில்லை. அந்தக் கட்சி, பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு எதிராக அரசியல் ரீதியாகப் போரா டாமல் அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டுகிறது. இதற்காக, புலன் விசாரணை அமைப்புகள் மூலமாக வும் தற்போது விசாரணைக் கமிஷன் மூலமாகவும் காங்கிரஸ் மிரட்டுகிறது என்றார்.

இதே விவகாரம் தொடர்பாக கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கை அவர்களது அவசரகால மனநிலையைக் காட்டுகிறது. குஜராத் மாநிலத்தில் ஏற்கெனவே ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதே பிரச்சினையில் மத்திய அரசும் ஒரு கமிஷனை நியமித்திருப்பது அதன் அதீத ஆர்வத்தைக் காட்டுகிறது. தனது அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்கு காங்கிரஸ் கட்சி எந்த முறையையும் கையாளும் என்பதற்கு இது ஓர் அடையாளமாகும் என்று அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் மறுப்பு

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே கூறுகையில் “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவோ, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரண மாகவோ விசாரணை கமிஷன் அமைக்கப்படவில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x