Last Updated : 20 Apr, 2017 08:01 AM

 

Published : 20 Apr 2017 08:01 AM
Last Updated : 20 Apr 2017 08:01 AM

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளவரசி: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி மறுப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக (அம்மா) பொதுச் செயலாளர் சசிகலா அவரது உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூருவில் உள்ள‌ பரப்பன அக்ரஹாரா மத்திய‌ சிறையில் பிப்ரவரி மாதம் அடைக்கப்பட்டனர்.

அப்போது சசிகலா உள்ளிட்டோர் தரப்பில், தங்களுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் இருக்கிறது. எனவே எங்கள் குடும்ப மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளையும், தனியார் மருத்துவமனை சிகிச்சையையும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதை சிறைத் துறை நிராகரித்தது. எனினும் சசிகலாவும் இளவரசியும் மகளிர் சிறையில் ஒரே அறையில் அடைக்கப்பட்டனர்.

அண்மையில் இளவரசிக்கு உடல் நிலையில் பாதிப்பு அதிகரித் ததால் தினமும் மருத்துவரால் கண் காணிக்கப்படுகிறார்.இந்நிலையில் தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறவும், உடல் பரிசோதனை செய்யவும் அனுமதிக்க வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறைத்துறை மருத்துவமனையில் இளவரசி கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து இளவரசியின் உடல்நிலை குறித்து சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமாருடன் சிறை மருத்துவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் இதுகுறித்து கர்நாடக சிறைத்துறை டிஐஜி சத்தியநாராயண ராவிடம் தகவல் தெரிவித்தனர்.

இதைப் பரிசீலித்த அவர் கூறும்போது, “இளவரசியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க முடியாது. மற்ற கைதிகளை போல பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.அங்குள்ள மருத்துவர்கள் பரிந்துரை செய்தால், தனியார் மருத்துவமனையில் உடல் பரிசோதனை மட்டும் செய்துகொள்ள அனுமதிக்கப்படும். ஆனால் சிகிச்சை பெற அனுமதிக்க முடியாது” என்றார்.

இதையடுத்து, இளவரசியின் மகன் விவேக், மருமகன் ராஜராஜன் ஆகியோர் நீதிமன்றத்தை அணுகலாமா என வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினர். இளவரசியின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டால், உச்ச நீதிமன்றத்தை அணுகவும் திட்டமிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x