Published : 14 Sep 2016 12:58 PM
Last Updated : 14 Sep 2016 12:58 PM
தமிழகம், கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
நாளை (வியாழக்கிழமை) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், கன்வில்கார் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.
முன்னதாக, நாளை கர்நாடகாவிலும், நாளை மறுநாள் தமிழகத்தில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் பி.சிவக்குமார் (சமூக ஆர்வலர்) தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆதிஷ் அகர்வால் தெரிவித்தார். ஆனால், மனு நாளையே விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர்.
அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, "காவிரி நீர் பங்கீடு தொடர்பாக இரு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் போராட்டக்காரர்கள் மீது சம்பந்தப்பட்ட அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் வலியுறுத்த வேண்டும்.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்குமாறு இரு மாநில அரசுகளுக்கும் வலியுறுத்த வேண்டும். கலவரத்தில் ஈடுபட்டு சேதங்களை விளைவிக்க தூண்டிய போராட்ட ஒருங்கிணைப்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்" எனக் கோரப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT