Published : 06 Dec 2013 12:25 PM
Last Updated : 06 Dec 2013 12:25 PM

சவாலானவர்தான் நரேந்திர மோடி - காங்கிரஸ் கட்சியினருக்கு பிரதமர் எச்சரிக்கை

பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சவாலாக விளங்கக் கூடியவர்தான். கட்டுக்கோப்பான நிலையில் உள்ள அந்த கட்சியின் பலத்தை நாம் குறைத்து மதிப்பிடமுடியாது என்று காங்கிரஸ் கட்சியினரை எச்சரித்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.

சவாலானவர் அல்ல மோடி என காங்கிரஸ் கட்சியினர் சிலருக்குள் நிலவும் எண்ணத்தை ஏற்கமுடியாது என இதன் மூலம் நிராகரித்துள்ளார் மன்மோகன் சிங்.

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி தோல்வி எப்படி இருந்தாலும் திடமான மன உறுதியுடன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத்தேர்தலை காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ளும் என்றும் பிரதமர் கூறினார்.

எதிர்க்கட்சியினரும் பலம் மிக்கவர்கள்தான் என்கிற கருத்து உடையவர்களில் நானும் ஒருவன். இப்போதைய செயல்பாடுகளில் திருப்தி அடைந்து மெத்தனமாக இருந்து விடக்கூடாது என கட்சியினரை எச்சரித்தார் அவர்.

பத்திரிகை ஒன்றின் சார்பில் நடைபெற்ற தலைமைத்துவ பண்பு உச்சி மாநாட்டில் வெள்ளிக்கிழமை உரையாற்றினார் பிரதமர். அதன் பிறகு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

முன்னதாக தனது உரையில்,

‘அரசியலில் உள்ள அனைவருமே ஊழல்வாதிகள், தன்னலம்மிக்கவர்கள், அயோக்கியர்கள், மக்கள் விரோதிகள் என்று முத்திரை குத்த சிலர் முயற்சிக்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது.

கடந்த 2 ஆண்டுகளாகவே நல்லது செய்வது போல இவ்வாறு தீங்கு இழைக்கிறார்கள். இந்தியாவுக்கு ஜனநாயகம் நன்மை பயக்கவில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்தவும் முயற்சி நடைபெறுகிறது. நாடாளுமன்றத்தின் தீர்ப்பையும் ஏற்க மறுத்து நாடாளுமன்ற அமைப்பு மீதே தாக்குதல் நடத்துகிறார்கள்’ என்றார்.

டெல்லி, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடக்க உள்ள நிலையில் இந்த மாநிலங்களில் காங்கிரஸுக்கு தோல்வி என கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. மிசோரம் மாநில வாக்குகளும் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட உள்ளன.

இது பற்றி கேட்டதற்கு, ‘தேர்தல் முடிவுகள் எப்படி அமைந்தாலும் தன்னம்பிக்கை உணர்வுடன் அடுத்த பொதுத் தேர்தலை காங்கிரஸ் எதிர்கொள்ளும்’ என்றார்.

வகுப்பு வன்முறை தடுப்பு மசோதா தேர்தலில் வாக்குகளை கவரும் உத்தி அல்ல.

கலவரத்தை தடுக்கமுடியாமல் போனால் பாதிக்கப்படுவர்களுக்கு போதிய இழப்பீடு கிடைக்க வழிசெய்யவேண்டும் என்பதே அரசின் இந்த முயற்சி.

முசாஃபர்நகரிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் நடந்த சம்பவங்கள் நமது நெஞ்சில் இன்னும் நிறைந்திருக்கிறது. மக்களை பாதுகாப்பதில் தவறுவதில்லை என நாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். இருப்பினும் சில வேளையில் இதில் பிசகல் ஏற்படலாம். அத்தகைய நிலைமை ஏற்படுவதைத் தடுக்க இந்த மசோதா நிறைவேறினால் உதவியாக இருக்கும் என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x